திருச்சி: மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு நடுக்களம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் பண்ணப்பட்டி ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் கிரேன் மற்றும் கூலி ஆட்களைப் பயன்படுத்திப் போர் குழாய்கள் ஏற்றி இறக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கான ஒப்பந்தத் தொகையை ஊராட்சி நிர்வாகம் தவணை முறையில் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் தற்போது, மூன்றாம் தவணை 65000 ரூபாயை ஊராட்சி நிர்வாகம் வழங்க வேண்டி இருந்துள்ளது.
இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மலையாண்டி என்பவர் பழனியப்பனை அலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு ரூபாய் 15 ஆயிரம் கமிஷன் கொடுத்தால் தான் தவணைத் தொகையைப் பெற ஒப்புதல் அளிப்பேன் என கராராகப் பேசியுள்ளார். மேலும், கடந்த இரண்டு தவணைத் தொகைக்கான கமிஷனை ஊராட்சி செயலரிடம் தான் கொடுத்து உள்ளாய் என்றும் தற்போது தனக்கு அந்த கமிஷன் தொகையைத் தர வேண்டும் என்றும் ஊராட்சி செயலாளருக்கு எதுவும் கொடுக்க தேவையில்லை என்றும் கூறி உள்ளார்.
அதற்கு ஒப்பந்ததாரர் பழனியப்பன் தன்னிடம் பணம் ஏதும் தற்போது இல்லை என்றும் தனது 11 வயது மகனுக்கு சுகர் இருப்பதால் அவன் மருத்துவச் செலவிற்கே பணம் இல்லை. நகையை அடமானம் வைத்துத் தான் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த பண்ணப்பட்டி ஊராட்சித் தலைவரின் கணவர் மலையாண்டி தனக்கும் நிறையச் செலவினங்கள் உள்ளதாகவும், அதனால், காலம் தாழ்த்தாமல் பணத்தை விரைவாகத் தரும்படியும், தவறும் பட்சத்தில் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பழனியப்பன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் தனிப்பிரிவுக்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தயவு செய்து எனக்கான ஒப்பந்தத் தொகையை விரைவில் கிடைக்கப் பெற முதலமைச்சர் அவர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு கிடைக்கும் அந்தத் தொகையின் மூலம் தான் எனது மகனின் மருத்துவச் செலவை நான் மேற்கொள்ள முடியும் என்றும், பணம் கிடைக்காத பட்சத்தில் நான் கடிதம் எழுதி வைத்துவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் கண்ணீர் மல்கப் பேட்டி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் பண்ணப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மலையாண்டியிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் இதுவரை அவரிடமிருந்து பணம் பெறவில்லை என்றும். ஆடியோவில் நீங்கள் பணம் கேட்பது பதிவாகியுள்ளது என்ற கேள்விக்கு விளக்கமளிக்க மறுத்து விட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பண்ணப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பண்ணப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் விளக்கம் அளித்தால் அதனை வெளியிடவும் ஈடிவி பாரத் தயாராக உள்ளது.
இதையும் படிங்க: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கையை பிளேடால் அறுத்து நூதன போராட்டம்.. என்ன காரணம்?