ETV Bharat / state

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்.. பாதுகாப்பு பணிகளுக்காக இணையும் இருமாநில காவல்துறை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 11:29 AM IST

TN and KL police meeting: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தமிழக - கேரள எல்லை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இரு மாநில காவல்துறையினர் இணைந்து குற்றாலத்தில் நேற்று (பிப்.18) ஆலோசனை மேற்கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பாதுகப்பு பணிகளுக்காக இருமாநில காவல்துறை ஆலோசனைக் கூட்டம்
நாடாளுமன்றத் தேர்தல் பாதுகப்பு பணிகளுக்காக இருமாநில காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

தென்காசி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக - கேரளா எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.19) நடைபெற்றது.

தென்காசி அடுத்த குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தென்காசி மற்றும் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தேர்தலின் போது எல்லைப் பகுதியில் மேற்கொள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தனர்.

மேலும், தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனையை இரு மாநில காவல் துறையினரும் ஒன்றிணைந்து மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.K.சுரேஷ்குமார் மற்றும் கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபு மேத்யூ தலைமையில் நடைபெற்றது.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் புனலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்டுவேர்ட் கீலர், தென்காசி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் எல்லைப் பகுதியான தென்மலை மற்றும் அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இரு மாநில காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

குறிப்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் நடக்கும் சட்ட விரோத செயல்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அலோசித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இரு மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய அவர்கள், தேர்தலின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து இரண்டு மாநில காவல் துறையும் இணைந்து ஆலோசித்துள்ளதாகவும், இரு மாநிலத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும், தெரிவித்தனர்.

மேலும், தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் இரு மாநில காவல்துறை ஒன்றிணைந்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், எல்லைப் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த, புளியறை மற்றும் மேக்கரை பகுதியில் நவீன சிசிடிவி கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளதாகவும், கேரளாவிலும் உள்ள சோதனை சாவடிகளில் கேரளவின் வனத்துறை அதிகாரிகளும், கேரள மாவட்ட போலீசாரும் ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி:விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனா? விசிகவின் ஆதவ் அர்ஜூனா? போட்டி யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.