ETV Bharat / state

தாம்பரம் அருகே இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் கைது! - College Student Murder in Tambaram

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:20 PM IST

College Student Murder in Tambaram: தாம்பரத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவரை 3 பேர் சேர்ந்து தாக்கிய சம்பவத்தில் மாணவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், கல்லூரி மாணவரைத் தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உயிரிழந்த கல்லூரி மாணவர் உதயா
உயிரிழந்த கல்லூரி மாணவர் உதயா (credit: ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, தாம்பரம் அடுத்த திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் உதயா. இவர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிட்லபாக்கம் சேது நாராயணன் தெருவில், உதயா தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் உதயாவை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பின்னர், வாக்குவாதம் தகராறாக மாற, இதில் ஆத்திரமடைந்த நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயாவை வெட்டி உள்ளனர். அப்போது, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குச் சென்ற உதயாவை விரட்டி, சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக உதயாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி உதயா இன்று(மே.13) அதிகாலை உயிரிழந்தார். மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் 3 பேரும், சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டி ஜெயசீலியிடம் சரணடைந்தனர். பின்னர் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களான, மப்பேடு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் நரேஷ் (24), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணா (19) மற்றும் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வரும் சாந்தகுமார் என்பதும் தெரியவந்தது.

விசாரணையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஏற்பட்ட தகராற்றில், உதயா நரேஷை தாக்கியதாகவும், இதற்கு பழி வாங்குவதற்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா போதையில் உதயாவை அரிவாளால் வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:"கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.