ETV Bharat / state

சீர்காழி அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி சிக்கியது எப்படி? - MGR Govt College in Sirkali

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 12:14 PM IST

Fake Flying Squad Officer Arrest:சீர்காழி அருகே உள்ள எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்து ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரியை பேராசிரியர்கள் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo of Fake Flying Squad Officer and MGR Govt College
பிடிபட்ட போலி பறக்கும் படை அதிகாரி மற்றும் எம்.ஜி.ஆர் அரசு கல்லூரியின் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: சீர்காழி அருகே உள்ள புத்தூர் பகுதியில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

தற்போது இந்த கல்லூரியில் கடந்த 10 நாட்களாக இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்பிடிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பிபிஏ., பிஏ., தமிழ் மற்றும் ஆங்கில இளங்கலை பட்டப்படிப்புக்கான தேர்வு நேற்று (மே 13) மதியம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லூரி முதல்வர் அறைக்குள் வந்த நபர் ஒருவர், தன்னை பறக்கும் படை அதிகாரி எனவும் மாணவர்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியதாகவும், அதனைத் தொடர்ந்து என்னுடன் வாருங்கள் என்று பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக சென்று தேர்வு எழுதும் மாணவர்களை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதன் தொடர்ச்சியாக, அலுவலர்கள் அறைக்கு வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்த அந்த நபரை அங்குள்ள பேராசிரியர்கள் வரவேற்று காபி மற்றும் இனிப்பு வழங்கியதாகவும், அதன் பிறகு அவரிடம் கல்லூரி பொறுப்பு முதல்வர் முரளி மற்றும் ஆசிரியர்கள் உரையாடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த உரையாடலில், அந்த நபர் போலி அதிகாரி என்பது தெரியவந்ததாகக் கூறி, உடனடியாக அங்கிருந்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குமார் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் சேர்ந்து அந்த நபரிடம் பேச்சு கொடுத்து அறைக்குள்ளேயே அமரவைத்துவிட்டு, இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

கல்லூரியில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கொள்ளிடம் உதவி ஆய்வாளர் அருண்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார், பறக்கும் படை அதிகாரி என கூறிக்கொண்டு கல்லூரியில் இருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையின்போது, அவர் கொள்ளிடம் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பார்த்திபன் (27) என்பதும், ஆங்கிலம் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் ஏன் இப்படி போலி பறக்கும்படை அதிகாரியாகக் கல்லூரிக்குள் புகுந்தார்? இதன் பின்னணி என்ன? என்று பல கோணங்களில் போலீசார், அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செவிலியருக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு மருத்துவர் கைது! திண்டுக்கலில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.