ETV Bharat / state

“வடக்கு - தெற்கு பிரச்னை என்பது பிய்ந்து போன செருப்பு போன்றது” - அண்ணாமலை காட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 4:45 PM IST

Updated : Feb 11, 2024, 1:01 PM IST

Annamalai K: மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai inaugurated the portrait of D. C. K. Kannan
த.சி.க.கண்ணன் உருவப்படத்தை திறந்து வைத்த அண்ணாமலை

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மறைந்த தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனின் மருமகனும், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மொழிபெயர்த்தவருமான த.சி.க.கண்ணனின் உருவப்படத்தை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, “மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதிப் பகிர்வு மோடி பிரதமராக பதவியேற்றபோது 32 சதவீதமாக இருந்தது. தற்போது அதை 42 சதவீதமாக உயர்த்தியுள்ளார். பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு 30.5 ஆக இருந்தது. எனவே அப்போது அதை அதிகரிக்க வேண்டும் என முதலமைச்சராக இருந்த மோடி கூறினார்.

1960-இல் பல நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை தீர்மானித்தபோது, மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில், மாநிலங்களுக்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை தீர்மானித்தனர். எஞ்சிய 40 சதவீத நிதியை பிற வகையில் கணக்கிட்டு, மாநிலங்களுக்கு மத்திய அரசால் நிதிப் பகிர்வாக வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை, அந்த மாநிலத்திற்கான நிதிப் பகிர்வில் 15 சதவீதம் அளவிற்கு மட்டுமே கணக்கிடப்படுகிறது. மேலும், மாநிலத்தின் மக்களிடையே உள்ள வருவாய் வித்தியாசம் 40 சதவீதம் அளவு கணக்கிடப்படுகிறது. ஜியோகிராபிகல் ஏரியா என்ற அடிப்படையில் 15 சதவீதமும், மாநிலத்தின் நிதி வசூல் போன்றவையும் கணக்கிடப்பட்டு, நிதிப் பகிர்வு வழங்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வசூலில் 50 ரூபாய் மாநிலத்திற்கு நேரடியாகவும், 21 ரூபாய் மறைமுக மானியமாகவும் என மொத்தம் 71 ரூபாய் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் 29 ரூபாயை மட்டுமே மத்திய அரசு எடுத்துக் கொண்டு, தனது கட்டமைப்புச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தனியார் பத்திரிகையில் ஒன்று, இந்த ஆண்டு நடத்திய ஆய்வில், இந்தியாவில் ‘மிகவும் பிரபலமற்ற முதலமைச்சராக’ ஸ்டாலின் இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற காரணத்தால்தான் திமுகவினர் வடக்கு - தெற்கு பிரச்னையை மீண்டும் எடுத்து வருகின்றனர்.

வடக்கு தெற்கு பிரச்னை என்பது பிய்ந்து போன செருப்பு போன்றது. அதை மீண்டும் கொண்டு வந்தால், அதன் விளைவை திமுகவினர்தான் சந்திக்க வேண்டியிருக்கும். எல்.முருகன் குறித்து டி.ஆர்.பாலு பேசியதை நாங்கள் சாதி ரீதியாக கொண்டு செல்லவில்லை.

ஆனால், மூத்த அமைச்சரான எல்.முருகன் குறித்து டி.ஆர்.பாலு பேசிய பேச்சில், அவர் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அவரது உடல் மொழி, பேசிய பேச்சை மக்களும் பார்த்துள்ளனர். எனவே, அதை வேறு எந்த கோணத்தில் எடுத்துக் கொள்ள முடியும்? இதில் சமூக நீதி இல்லையே. ஏற்கனவே ஒருமுறை நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா என்ற வார்த்தையை டிஆர்.பாலு பயன்படுத்தினார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.எஸ்.சுவாமிநாதனை போல் பாரத ரத்னா விருதுக்கு அவர் தகுதியானவர்: மூத்த பத்திரிகையாளர் என்.ராம் சுட்டிக்காட்டும் மற்றொருவர்!

Last Updated : Feb 11, 2024, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.