ETV Bharat / state

கனமழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு ரூ.201.6 கோடி நிவாரணம் - அரசாணை வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 9:31 PM IST

Etv Bharat
Etv Bharat

அதி கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை : தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது.

அதிகன மழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1 லட்சத்து 64 ஆயிரத்து 866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1 லட்சத்து 98 ஆயிரத்து 174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 லட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், 38 ஆயிரத்து 840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62 ஆயிரத்து 735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு,

பாதிக்கப்பட்ட மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : அழிவை நோக்கிச் செல்கிறதா தாமிரபரணி ஆறு? சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.