திருச்சி: பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றம் செய்ததை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.ஆர்.எம்.யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் இன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிமனையில் பணியாற்றும் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிலாளர்கள் பேரணியாக வந்து ரயில்வே பணிமனை வாசலில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பொது நிறுவனம் என்று சொல்லக்கூடிய ராணுவம், அரசு மருத்துவமனை உள்ளிட்டவை அரசுக்கு லாபம் தர முடியாது. அரசுக்கு லாபம் தரக்கூடிய ஒரே துறை ரயில்வே துறைதான். பொது நிறுவனத்தை தனியார் நிறுவனமாக மாற்றும் முயற்சி மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விமானத்துறை போன்று ரயில்வே துறையை தனியாராக மாற்ற வேண்டும் என மத்திய அரசு முயற்சிக்கிறது.
தனியார் நிறுவனத்தை ரயில்வே துறையில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். லாபத்துடன் இயங்கக்கூடிய ஒரே துறை இந்திய ரயில்வே துறை மட்டுமே. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே கூடிய விரைவில் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டு 1960 ஆம் ஆண்டுகளில் செய்தப்படி அகில இந்திய அளவில் மாபெரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; கோரிக்கை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு - விசாரணை தேதி தள்ளிவைப்பு!