ETV Bharat / state

“போதைப்பொருள் நுழைவைத் தடுக்க போலீசாருக்கு போதிய பயிற்சிகள் வழங்க வேண்டும்” - உயர் நீதிமன்றக்கிளை கருத்து! - Special Unit form trafficking ganja

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 8:04 PM IST

Special Unit formed against trafficking ganja: கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்புப் பிரிவு உருவாக்கக் கோரிய வழக்கை உத்தரவிற்காக ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High Court Madurai Bench file shot
Madras High Court Madurai Bench file shot (Credit - ETV Bharat Tamil Nadu)

மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கவும், போதைப் பொருட்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்புப் பிரிவு உருவாக்க உத்தரவிட வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "நீதிமன்றம் போதை தடுப்பு வழக்கு ஒன்றில் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த ஆய்வாளரே உயர் நீதிமன்ற மதுரைக்கிளை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார், தமிழக போதை தடுப்பு பிரிவின் சார்பில் அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், “பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் ஏராளமான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின் உள்ளிட்ட பிற போதைப் பொருட்களும், போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2023ஆம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 43 லட்சத்து 52,957 ரூபாய் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 7,389 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் தான் மாவட்ட வாரியாக உதவி ஆணையர் அல்லது துணை காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் போதை தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒத்தக்கடை பகுதியைப் பொறுத்தவரை, 2019 முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 49 போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1070.670 கிலோ கிராம் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழகத்திற்குள் போதைப்பொருட்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியதோடு, வழக்கில் விரிவான உத்தரவைப் பிறப்பிப்பதற்காக வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய விவகாரம்; காவலர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! - HRC Ordered A Fine Of Rs 1 Lakh

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.