ETV Bharat / state

விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய விவகாரம்; காவலர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! - HRC ordered a fine of Rs 1 lakh

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 6:53 PM IST

Custodial torture: கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை நிர்வாணப்படுத்திக் கொடுமைப்படுத்தியதாக, காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையம் கோப்பு புகைப்படம்
மாநில மனித உரிமைகள் ஆணையம் கோப்பு புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திருச்சியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரில், கடந்த 2008ஆம் ஆண்டு தனது மருமகன் குமாரை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும், மேலும் அவரை விடுவிக்குமாறு கேட்டதற்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விடுவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததாகவும், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தும் மீத பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறி, தனது மருமகனை விடுவிக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது மருமகனை மீட்க கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ததால் ஆத்திரமடைந்த போலீசார், தனது கணவரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.

இந்த புகார், ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திருச்சி துறையூர் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ராஜசேகர் உள்ளிட்ட போலீசார், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். குமார் உடன் குவாரியில் பணிபுரிந்த பெண் கொலை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு அவரை அழைத்துச் சென்றதாகவும், தங்களுக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த ஆணையம், பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குமாரும், அவரது மாமனாரும் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்தி மனித உரிமை மீறிலில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

இதற்காக ஒரு லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்ட ஆணையம், இந்த தொகையை சம்பந்தப்பட்ட ஐந்து போலீசாரிடம் இருந்து தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: ஈசிஆர் சாலையில் கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து; 5 பேர் உயிரிழப்பு - மு.க.ஸ்டாலின் இரங்கல்! - ECR Car Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.