ETV Bharat / state

மணக்க மணக்க அறுசுவை விருந்து.. அரசுப் பள்ளி மாணவர்களை நெகிழ வைத்த புதுச்சேரி போலீசார்! - Puducherry Govt Schools

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 1:42 PM IST

Puducherry Police feast 12th toppers: புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகளை திருபுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விருந்தளித்தனர்.

மாணவர்களை பாராட்டும் போலீசார் புகைப்படம்
மாணவர்களை பாராட்டும் போலீசார் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

மாணவர்களுக்கு விருந்தளித்த வீடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

புதுச்சேரி: புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. இதில் புதுச்சேரியில் ஒரு அரசுப் பள்ளி உள்பட 55 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்நிலையில், அரசுப் பள்ளியில் படித்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் வடை, பாயாசம், அப்பளம், காரக்குழம்பு சாம்பார் என தலை வாழை இலை விருந்தளித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு: தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளும் வளர வேண்டும் என்பது பலரது ஆர்வமாக இருந்தாலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். இதன் ஒரு படி மேலாகச் சென்று மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் புதுச்சேரியில் பெரும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

அதாவது புதுச்சேரி திருபுவனை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவண்டார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படித்து, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வகையில், திருபுவனை காவல் நிலையத்திற்கு அழைத்த உதவி ஆய்வாளர் இளங்கோ, பிளஸ் டூ தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து, எழுது பொருட்களை இலவசமாக வழங்கி கௌரவப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உதவி ஆய்வாளர் இளங்கோ தலைவாழை இலை போட்டு வடை, பாயாசம், கூட்டு, பொரியல், காரக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என அறுசுவையோடு பரிமாறி, மாணவ மாணவிகளையும் பெற்றோரையும் நெகிழ வைத்தார்.

உதவி ஆய்வாளர் அறிவுரை: இந்த நிகழ்ச்சியில் பேசிய உதவி ஆய்வாளர் இளங்கோ, “வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்று லட்சியம் வைத்திருக்கிறீர்களோ, அதை நோக்கியே உங்களது பார்வை இருக்க வேண்டும். தவறான பாதைக்கு யாரும் சென்று விடக்கூடாது” என்று மாணவ மாணவிகளை கேட்டுக்கொண்டார்.

மேலும், “இந்த அளவிற்கு உங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து பெற்றோரை ஒருபோதும் கைவிடக்கூடாது. அவர்களை மறக்கக் கூடாது. உங்களது எண்ணம் அனைத்தும் சாதிக்க வேண்டும் என்பதில் இருக்க வேண்டும். நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றால், நிறைய படிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் வழிகாட்டுதல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.