ETV Bharat / state

"மராமத்து என்ற பெயரில் சட்டங்களை மீறிய செயல்" - ஓஎன்ஜிசி மீது பேராசிரியர் ஜெயராமன் குற்றச்சாட்டு! - Professor Jayaraman talk about ONGC

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 10:48 AM IST

Professor Jayaraman: ஓஎன்ஜிசி நிறுவனம் குத்தாலம் பகுதிகளில் உள்ள 8 கிணறுகளில் மராமத்து பணிகள் செய்யப்போவதாக அறிவித்திருப்பது சட்டத்தை மீறல் எனவும், இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது எனவும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜெயராமன் புகைப்படம்
பேராசிரியர் ஜெயராமன் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

பேராசிரியர் ஜெயராமன் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 8 கிணறுகளில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், "வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் எண்ணெய் எடுப்பு திட்டங்களால் காவிரிப்படுகை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை ஏற்றுக்கொள்கிறது. அச்சட்டம் பழைய திட்டங்கள் தொடர அனுமதித்தது. இந்நிலையில் பழைய எண்ணெய் கிணறுகளில் மராமத்து செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சேபனைக்குரிய பெரிய வேலைத் திட்டங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் நடத்த முயற்சித்து வருகிறது.

இத்திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், குத்தாலம் வட்டாட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்து ஓஎன்ஜிசி நடவடிக்கைகளை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தடுத்து நிறுத்தியது. சம்பந்தப்பட்ட 8 எண்ணெய் கிணறுகள் பற்றிய ஆவணங்களை மாவட்ட நிர்வாகம் பரிசோதிப்பதுடன் அதன் நகல்களை பார்வைக்கு வழங்க வேண்டும் ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த ஆவணமும் காட்டப்படவே இல்லை. மாவட்ட நிர்வாகம் அந்த ஆவணங்களைப் பரிசோதித்ததாகவும் தெரியவில்லை.

இந்நிலையில் மராமத்து நடத்தப் போவதாக ஓஎன்ஜிசி அறிவித்தது காவிரி படுகை மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பராமரிப்பு என்ற பெயரில், மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஷேல் என்ற களிப்பாறையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. பழைய எண்ணெய் கிணறுகளின் உள்ளே 1,500 மீட்டர் ஆழத்தில், பக்கவாட்டில் சாய்வாக சைடு ட்ராக்கிங் என்ற பெயரில் புதிதாக குழாய்களை அமைத்து, 3 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு பக்கவாட்டுக் கிணறுகளை அமைத்து எண்ணெய் - எரிவாயு எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட திட்ட அறிக்கையில் கூறப்படாத ஒன்று. சட்டங்களை மீறிய செயல் இது. ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட திட்டத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் புதிதாக சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை மற்றும் அதை சரி செய்வதற்கான மேலாண்மை திட்ட அறிக்கை ஆகியவற்றைத் தயார் செய்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புதிய அனுமதியைப் பெற வேண்டும். இத்தகைய செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி தரக்கூடாது.

மராமத்து என்ற பெயரில் அபாயகரமான திட்டங்களை ஓஎன்ஜிசி நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை வெளியிடப்படும் வரை ஓஎன்ஜிசி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று தடை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு இந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். ஓஎன்ஜிசி மராமத்து பணிகளை மேற்கொள்ளும் செயல்பாடுகளில் ஈடுபடுமேயானால் மக்களை ஒன்று திரட்டி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை; கேரள முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.