ETV Bharat / state

வீட்டு சுவரில் நோட்டீஸ்; ஜாபர் சாதிக்கின் தாயார் ஃபோட்டோ எடுத்து அனுப்பினாரா? போலீசார் தீவிர விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 9:45 PM IST

மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், ஜாபர் சாதிக் வீட்டிற்குச் சீல் வைக்கப்பட்டு, ஒட்டப்பட்ட நோட்டீஸை அவரது தாய் செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டிஸை ஜாபர் சாதிக்கின் தாயார் ஃபோட்டோ எடுத்து அனுப்பினாரா
வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டிஸை ஜாபர் சாதிக்கின் தாயார் ஃபோட்டோ எடுத்து அனுப்பினாரா

சென்னை: கடந்த 15ஆம் தேதி டெல்லியில் விலை உயர்ந்த போதைப்பொருள் 50 கிலோ கடத்திய விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிஃபர் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய மூவர் மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.

அதில், கடந்த மூன்று ஆண்டுகளாக 2000 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருட்களைத் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறிக் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. அவரின் சகோதரர்களான மொய்தீன், சலீம் ஆகியோருடன் இணைந்து போதைப் பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வந்தது தெரியவந்தது

பின்னர், தலைமறைவாகியுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் மொய்தீன், சலீம் ஆகியோரை மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்ற மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மூன்று மாடி கொண்ட வீடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அவரது வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டி, சீல் வைத்துள்ளனர். மேலும் டெல்லி மத்தியப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாத வகையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் தாய் சீல் வைத்த அவரது வீட்டிற்குச் சென்று, மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஒட்டிச் சென்றுள்ள நோட்டீஸையும், சீல் வைத்ததையும் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஆட்டோவில் சென்றுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அதில் வந்த ஆட்டோவின் பதிவு எண் மற்றும் உடன் வந்த நபர் பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அவர் ஜாபர் சாதிக்கிற்கு அனுப்புவதற்காகப் புகைப்படம் எடுத்தாரா, வேறு காரணமா என்ற கோணத்தில் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை மத்தியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை பழிவாங்குகிறோமா? - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அளித்த பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.