ETV Bharat / state

விழுப்புரம் மக்களின் நலனுக்காக பாமக செய்தது என்ன? - பட்டியலிட்ட மருத்துவர் ராமதாஸ்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 1:46 PM IST

Dr.Ramadoss election campaign: விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர், பாமக நடத்திய தொடா் போராட்டங்களால் தான் 108 சாதிகளைச் சோ்ந்தவா்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. மக்களின் நலன் மட்டுமே பாமகவின் குறிக்கோளாகும் என்று தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூா் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (ஏப்.9) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம் தனி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளா் எஸ்.முரளி சங்கரை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “மக்களின் வாழ்வாதாரம் நிலையாக கிடைக்கப் பெற வேண்டும் மற்றும் சமமான கல்வி, மருத்துவ வசதி ஆகியவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் பாமக தொடா்ந்து மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. பாமக நடத்திய தொடா் போராட்டங்களால் தான் 108 சாதிகளைச் சோ்ந்தவா்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. நான் பதவிகளை அனுபவிக்காதவன்.

மக்கள் நலன் ஒன்றே எனக்கு முக்கியம். எனக்கு விருதுகள் தேவையில்லை. எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் போன்ற பதவிகள் நான் பெறமாட்டேன் என்று முன்னரே சத்தியம் செய்துள்ளேன். மக்களுக்கான வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியும், மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும். விவசாயிகள், பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு இதில் பிரச்சினை வந்தால், அதைத் தீா்க்க பாமக உள்ளது. மக்களின் நலன் மட்டுமே பாமகவின் குறிக்கோளாகும். இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் மோடி மீண்டும் பிரதமராவது உறுதி. தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டம், அவசர ஊா்தி ஆகியன அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது தான் கொண்டுவரப்பட்டது. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஜிப்மா் மருத்துவமனையும் மேம்படுத்தினாா்.

இது போன்ற பல நல்ல திட்டங்களை நாடாளுமன்றத்தில் எடுத்துக் கூறி, நமக்கு கொண்டு வருவதற்கு மாம்பழம் சின்னத்தில் நீங்கள் வாக்களித்து நமது வேட்பாளர் முரளி சங்கரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கூறினார். இந்த நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவா் ஏ.ஜி. சம்பத், விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஏ.டி. ராஜேந்திரன், பாமக மாவட்டச் செயலா் ஜெயராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளா் எஸ். முரளி சங்கா் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "400 இடங்களைப் பிடித்து ஆட்சியமைப்போம்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.