ETV Bharat / state

ஹிந்தியில் பேசினால் தான் டிக்கெட்? கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பரிதவிக்கும் பயணிகள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 9:13 PM IST

Updated : Feb 17, 2024, 10:42 AM IST

Kovilpatti Railway Station: "ஹிந்தியில் பேசினால் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாகத்தான் டிக்கெட் தருவேன்" என்று கோவில்பட்டி ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டரில் கூறப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

kovilpatti railway station ticket counter communication issue
கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் தகவல் தொடர்பு பிரச்சினை

கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் தகவல் தொடர்பு பிரச்சினை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரயில்வே நிலையம் மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில்வே நிலையங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மற்றும் தென்காசி என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, ரயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது. இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டிக்கெட் கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் சமந்தபட்ட அதிகாரிகள் தற்போது வரையிலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே இருக்கும் ஒரேயொரு டிக்கெட் கவுண்டரில் வடமாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டும் அல்லாது, அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை என்றும் ஹிந்தி மட்டுமே தெரியும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இன்று (பிப்.16) வழக்கம் போல வடமாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர் டிக்கெட் கவுண்டரில் இருந்துள்ளார். டிக்கெட் மற்றும் தட்கல் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்ய வந்தவர்கள் கூறிய விபரங்களைப் புரிந்து கொள்ள முடியாமல், "ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாகத்தான் தருவேன்" என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்களும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர். 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்தும் ரயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்கச் சென்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாகப் பதில் கூறியதால், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, போலீசார் இரு தரப்பினையும் சமாதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். இந்த பிரச்சினையினால் ரயில்வே நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், "கோவில்பட்டி ரயில் நிலையத்தில் செயல்படும் ஒரேயொரு கவுண்டரில் ஹிந்தி மட்டும் தெரிந்த நபர் பணியில் இருப்பதால், அவருக்கு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை. ஆகவே, தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லையென்றால், தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும்" என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரப்பாக்கம் பகுதிவாசிகளே உஷார்.. தப்பியோடிய அனுமன் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள்!

Last Updated : Feb 17, 2024, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.