ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் செந்தில் பாலாஜியை வெளியே கொண்டுவருவேன்: கரூரில் எம்பி ஜோதிமணி வாக்குறுதி! - Karur MP jothimani

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 12:09 PM IST

Kaur MP Jothimani: நான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் உங்கள் முன்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துவந்து நிறுத்துவேன் என கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உறுதியளித்துள்ளார்.

jothiman
ஜோதிமணி

ஜோதிமணி

கரூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். அந்த வகையில் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய கிழக்கு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அவரை ஆதரித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜோதிமணி பேசியதாவது, "நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ரூ.500க்கு சிலிண்டர் வாங்க வேண்டுமா? ரூ.1000க்கு சிலிண்டர் வாங்க வேண்டுமா என்றும், ரூ.60 க்கு பெட்ரோல் வாங்க வேண்டுமா? இல்ல ரூ.120 க்கு பெட்ரோல் வாங்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தல்.

கரூரில் 2 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தோம். தற்போது 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பதில் தடுமாறுகிறோம். அதானி, அம்பானி நாட்டை கொல்லையடித்து விட்டு பிரதமர் மோடியை விட நன்றாக உள்ளனர். பத்தாண்டு கால பிரதமர் மோடி ஆட்சியை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும்.

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய என் மீது, தொகுதி பக்கம் வரவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பிரச்சாரம் செய்யும் அதிமுக, பாஜக வேட்பாளர்களை மக்கள் திருப்பி கேள்வி கேட்க வேண்டும். தனக்கு தொகுதி மக்கள் தான் குடும்பம். எனது முழு நேர பணியை தொகுதி மக்களுக்காக செலவிடுகின்றேன்.

எனக்கென்று எந்த தொழிலும் கிடையாது. நான் தனிநபர் என்பதால் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தில் பத்து பேருக்கு முதியோர் உதவித் தொகையை, 4 ஆண்டுகளாக வழங்கி வருகின்றேன். அமலாக்க துறையை வைத்து பல்வேறு மாநிலங்களில் மத்திய பாஜக அரசு அடக்க முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி உட்பட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை அமலாக்கத் துறையை வைத்து சட்டவிரோதமாக சிறையில் அடைத்துள்ளது. கரூர் தொகுதியில் நான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று செந்தில் பாலாஜியை உங்கள் முன் அழைத்து வருவேன்” என்றார்.

இந்த பிரச்சாரத்தில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, மத்திய கிழக்கு பகுதி நகர செயலாளர், கரூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக, கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் பசுபதிபாளையம், அருணாச்சல நகர், காந்தி கிராமம், திண்ணப்பா நகர், ரத்தினம் சாலை, கரூர் மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொண்ட போது, வழி முழுவதும் பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகம் இட்டு வரவேற்பு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா? - LPG Gas Cylinder Price

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.