ETV Bharat / state

'வேட்டைநாயைப் போல அமலாக்கத்துறை, ஐடி துறையை பயன்படுத்துவதா?' - கமல்ஹாசன் - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 8:02 AM IST

Kamal Haasan Election Campaign at Trichy: தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது என்றும், எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்கள் என்றும் திருச்சியில் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார். மேலும் அமலாக்கத்துறை, ஐடி துறையை வேட்டைநாயைப் போல பயன்படுத்துவதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Kamal Haasan election campaign
Kamal Haasan election campaign

திருச்சி: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என அனைத்து பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருச்சி ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு நேற்று (செவ்வாய்கிழமை) திறந்தவெளி வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய கமல்ஹாசன், "தமிழ், தெலுங்கு, சௌராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஊர், திருச்சி. இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும், தமிழ்நாட்டில் அது மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகையாகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான், நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதைப் படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமை சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்கத் தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. அரசியலை விமர்சிக்க வேண்டியது உங்கள் கடமை.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான், நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்திருக்கிறேன். இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்கள் எனக் கேட்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள். உங்கள் மனதில் நான் எப்போது வேண்டுமானால், வந்து உட்காரலாம் என்று நிரூபித்தும் இருக்கின்றீர்கள்.

உங்கள் மனதிலும் எனக்கு இடமுண்டு; உங்கள் இல்லங்களிலும் எனக்கு இடமுண்டு. அதனால்தான், தொலைக்காட்சி வாயிலாக சந்தித்துக் கொண்டிருந்தேன். நான் ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் தோன்றும் போதும், இதுபோல ஆயிரம் பேர் கொண்ட கூட்டத்தில் நின்று பேசிய மகிழ்ச்சி கிடைக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது.

அண்ணன் தம்பிகளை மோதவிட்டுப் பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அதுதான் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சரியாக வரி கட்டும் நபர். ஆகையால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை இவையெல்லாம் எனக்காக வேலை செய்கிறது என நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால், அவற்றை வேட்டை நாய்போல வேறு யாரோ? பயன்படுத்துகின்றனர். இப்போது எனக்காக இல்லை, என் தம்பிக்கு சீட்டுக் கொடுங்கள் எனக் கேட்டு வந்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்கு திமுக உடந்தையாக இருந்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது - ஜி.கே வாசன்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.