நாடாளுமன்ற தேர்தல் 2024: தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார் செய்ததும், செய்யத் தவறியதும்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 10:51 AM IST

public and politicians reactions on Tenkasi mp Dhanush M Kumar by seithathum seiya thavariyathum etv bharat special story

Tenkasi MP Dhanush M Kumar: தேர்தலின் போது பல வாக்குறுதிகளைக் கொடுத்த எம்.பி., தனுஷ் எம்.குமார் அவற்றை நிறைவேற்றவில்லை என ஒரு தரப்பினர் கூறினாலும், நாடாளுமன்றத்தில் தொகுதிக்காகத் தான் குரல் கொடுத்துள்ளதாகவும், ரயில்வே திட்டம் உள்ளிட்ட பலவற்றை நிறைவேற்றியுள்ளதாகவும் தனுஷ் எம்.குமார் தெரிவித்துள்ளதை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் உங்கள் எம்பி செய்ததும் செய்யத் தவறியதும் தொகுப்பில் காணலாம்..

தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார் செய்ததும்..! செய்யத் தவறியதும்

தென்காசி: தென்னகத்தின் 'ஸ்பா' என சுற்றுலாப் பயணிகள் கொண்டாடும் குற்றால அருவிகளைக் கொண்ட தென்காசி தொகுதி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் பெருமளவில் வாழும் பகுதி ஆகும். இங்கு நெல், வாழை, கரும்பு, எலுமிச்சை உள்ளிட்டவைகளின் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. சுற்றுலாத் தலம் மட்டும் அல்லாமல் குற்றால நாதர், காசி விஸ்வநாதர், சங்கரநாராயணர் கோயில், தோரண மலை முருகன் கோயில் என பல புகழ்பெற்ற ஆன்மிக தலங்களையும், அடவிநயினார் அணை, கடனா நதி அணை, குண்டாறு அணை, கருப்பா நதி ஆகிய நீர்த்தேக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தென்காசி நாடாளுமன்ற தொகுதி.

தொகுதி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 2019ஆம் ஆண்டு பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது.

தமிழகத்தின் 37வது நாடாளுமன்றத் தொகுதியான தென்காசி, தென் பகுதியில் உள்ள ஒரே தனி தொகுதி ஆகும். தென்காசி தொகுதியில் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 பேர் ஆண்கள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பேர் பெண்கள், 203 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

1957-இல் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இந்த தொகுதி விளங்கி வந்துள்ளது. இந்த தொகுதியில் தொடர்ந்து 9 முறை காங்கிரஸ் கட்சியும், ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், திமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.

எம்.அருணாசலம் 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 5 முறை காங்கிரஸ் கட்சி சார்பிலும், கடைசியாக 1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது 17வது மக்களவையின் தென்காசி தொகுதி எம்பியாக திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் உள்ளார்.

பக்தர்களின் வசதிக்காக ஆண்டவன் கட்டளையின் பேரில் உருவானதாகக் கூறப்படும் தென்காசியில் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான கோரிக்கைகள் கூட நிறைவேறுவதேயில்லை என குமுறுகின்றனர் தொகுதி மக்கள். ஆனால் தொகுதியின் எம்பி பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், தொகுதி நலனுக்கான நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளதாகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர் சிலர்.

தென்காசி தொகுதி
தென்காசி தொகுதி

சமையல் கேஸ் டீலர் டூ எம்பி: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் எம்.குமார். பி.இ., எம்.பி.ஏ., எல்.எல்.பி., படித்தவரான தனுஷ் இண்டேன் கேஸ் டீலர் தொழில் மற்றும் விவசாயமும் செய்து வந்தார். இவரது தந்தை தனுஷ்கோடி, ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரது தாயார் இந்திரா, ராஜபாளையத்தின் முன்னாள் ஒன்றிய சேர்மன் ஆவார்.

தந்தை, தாய் காட்டிய வழியில் 1996ஆம் ஆண்டு முதல் திமுகவில் பயணிக்கும் தனுஷ் எம்.குமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், திமுகவின் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் தீவிர விசுவாசியாக அறியப்படும் தனுஷ் எம்.குமார் 2019ஆம் ஆண்டில் அவர் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று எம்பியும் ஆனார்.

4 லட்சத்து 76 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்ற தனுஷ் எம்.குமார் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட 1 லட்சத்து 20 ஆயிரத்து 286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தென்காசி தொகுதியைக் கைப்பற்றிய முதல் திமுக வேட்பாளர், முதல் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புகழ் எல்லாம் தங்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை எனத் தொகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தான் ஒரு விவசாயி எனக் கூறி ஓட்டுக் கேட்டவர் விவசாயிகளின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கூட கேட்கவில்லை எனக் கொந்தளிக்கின்றனர் தொகுதி விவசாயிகள்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024
புளியங்குடி எலுமிச்சை சந்தை

வாக்குறுதிகள்: பூ விலை வீழ்ச்சியை சந்திக்கும் சமயங்களில் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் செண்ட்(வாசனை திரவியம்) தொழிற்சாலை அமைக்கப்படும். செண்பகவல்லி அணை பிரச்சினையைத் தீர்ப்பேன். மாம்பழம் அதிகம் பயிரிடப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் ஆலை அமைப்பேன். விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்கக் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தொகுதி மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டு அறிவேன். தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகைகள் செய்து தருவேன் எனப் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

தொகுதிக்கு செய்தவை: விருதுநகர் - தென்காசி - செங்கோட்டை மார்க்கத்தில் ரயில் வழித்தடம் ரூ.161 கோடி மதிப்பில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் - கொல்லம் நான்கு வழிச்சாலை அகலம் 60 மீட்டரில் இருந்து 40 மீட்டராகக் குறைக்கப்பட்டதால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் அளவு குறைந்துள்ளது.

தாம்பரம் - செங்கோட்டை விரைவு வண்டி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ஆகியவை புதிதாக இயக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை - மயிலாடுதுறை, மதுரை - குருவாயூர், செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவை எம்.பி., தனுஷ் எம்.குமாரின் சாதனைகளாகக் குறிப்பிடப்படுகிறது.

நெல் விவசாயம்
நெல் விவசாயம்

நிறைவேற்றத் தவறியவை: திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை பணிக்காக ராஜபாளையம் முதல் வடகரை வரையிலான விவசாய நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகள் வைத்த கோரிக்கைக்குச் செவி சாய்க்காதது. குற்றாலத்தை மேம்படுத்தாதது, லெமன் சிட்டி என்ற பெயர் பெற்ற புளியங்குடியில் எலுமிச்சை சந்தை கொண்டு வராதது, செண்ட் ஆலை அமைக்காதது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

எம்பியை நம்பி ஏமாற்றமே மிச்சம்: அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் பாலமுருகன் கூறுகையில், "செண்பகவல்லி கால்வாய் திட்டத்தைக் கொண்டு வருவேன் என சொன்னார் செய்யவில்லை. குற்றாலத்தை சிறந்த சுற்றுலாத் தலமாக்குவேன் என்றார் அதையும் செய்யவில்லை. இரட்டைக்குளம் கால்வாயைக் கொண்டு வருவேன் என்றார் அதையும் செய்யவில்லை. தென்காசியில் டிப்போ அமைப்பதாக உறுதியளித்து வாக்கு சேகரித்தார் அதையும் செய்யவில்லை. திருநெல்வேலி ஹைகிரவுண்ட் மருத்துவமனை போல சுரண்டையில் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார், அதையும் நிறைவேற்றவில்லை. எம்பியை நம்பி ஏமாந்து நிற்கிறோம்" எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் கோரிக்கை நிறைவேறவில்லை: தேசிய விவசாயிகள் சங்க தென்காசி, திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் கூறுகையில், "விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு எம்பி குறிப்பிடும் வகையில் எதுவும் செய்யவில்லை. தென்காசி மக்கள் கடந்த காலங்களில் வறட்சியாலும், சமீபத்தில் வெள்ளத்தாலும் அதிகம் பாதிக்கப்பட்டனர். வறட்சி, வெள்ள பாதிப்பின் போது எம்பி நேரடியாக வந்து விவசாயிகளைச் சந்தித்தது இல்லை. இனி வருகின்ற எம்பியாவது மக்களோடு மக்களாக, விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த பகுதியில் எலுமிச்சை, பூக்கள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. அதனால் இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

தேவையற்ற இடங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் அதிக மழை பெய்யும் சமயங்களில் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பயிர்கள் அழுகி வீணாகி விடுகிறது. பயிர்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயி தடுப்பணையை உடைக்கும் நிலை கூட ஏற்படுகிறது. இதனால் லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட தடுப்பணை வீணாகிறது.

மேலும், தடுப்பணைகளால் குளத்திற்குச் செல்லும் நீர் தடைப்படுகிறது. இதனால் குளத்தை நம்பி இருக்கும் பல ஏக்கர் பாசன நிலங்கள் நீர் இன்றி வறட்சியால் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு வறட்சி நிவாரண நிதி ஒவ்வொரு ஆண்டும் முறையாகக் கிடைப்பது இல்லை. அடுத்து வரும் எம்பி எங்கள் கோரிக்கையை அரசுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

நெசவுத் தொழில்
நெசவுத் தொழில்

தொடர்வண்டி வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்: சுரண்டையைச் சேர்ந்த திமுக இளைஞரணி அமைப்பாளர் கண்ணன் ராஜா கூறுகையில், "தொடர்வண்டி வசதிகளை செய்து கொடுத்துள்ளார். தென்காசியில் இருந்து இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காகவும், தொழில் முனைவோர்கள் வெளி மாநிலங்கள் செல்லவும் ஏதுவாக சாளுக்யா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதுவும் விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

ESI மருத்துவமனை தரம் குறைவாக உள்ளது: பூ விவசாயி அந்தோணி கூறுகையில், "இங்கு 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரதான தொழிலாகப் பீடி சுற்றும் தொழில் தான் உள்ளது. ஆனால் இதற்கு சுரண்டையில் ஒரு இ.எஸ்.ஐ மருத்துவமனை தான் உள்ளது. அங்கும் சேவைகள் குறைவாகத் தான் உள்ளது. அந்த மருத்துவமனையை 50 படுக்கை வசதி உள்ள மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும். அந்த மருத்துவமனை கோவில்பட்டியை சப் டிவிஷனாக கொண்டு செயல்படுகிறது, அதன் சப் டிவிஷனையும் தென்காசிக்கு மாற்ற வேண்டும். சுரண்டை தபால் நிலையத்தையும் தரம் உயர்த்த வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதற்கும் திருநெல்வேலி தான் செல்ல வேண்டியுள்ளது. அதற்கான வசதிகளையும் தென்காசியில் ஏற்படுத்த வேண்டும்" என வேண்டுகோளை முன்வைத்தார்.

நிதி ஒதுக்கியும் வேலை நடக்கவில்லை: சமூக ஆர்வலர் பிரசாத் கூறுகையில், "தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுரண்டை பகுதியில் ஒரு நூலகம் 25 வருடங்களாக இயங்கி வருகின்றது. அந்த நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் தான் உள்ளது. மழை பெய்யும் சமயங்களில் கட்டிடத்தினுள் மழை நீர் ஒழுகுவதால் மக்கள் உள்ளே அமர்ந்து படிக்க முடியாத சூழல் தான் உள்ளது. இந்த நூலகத்தைச் சீரமைக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம். எம்பியும் அதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி நிதி ஒதுக்கி இருந்தார். ஆனால் அதற்கான வேலை நடக்கவில்லை. பள்ளி மாணவர்கள், அரசு தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் எனப் பலரும் பயன்படுத்தும் இந்த நூலகத்தை அடுத்து வரும் எம்.பியாவது சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

கருப்பா நதி அணை
கருப்பா நதி அணை

பீடி சுற்றுவதைத் தவிர வேறு வேலைவாய்ப்பு இல்லை: பூ வியாபாரியான அருள் தர்மராஜ் என்பவர் கூறுகையில், "இந்த தொகுதி விவசாயம், பீடி சுற்றும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதி. இங்கு அரசின் திட்டங்கள் அவ்வளவாக இல்லை. தக்காளி விலை நிலையற்ற நிலையில் உள்ளது. ஆனால் அதைச் சேமித்து வைக்க குடோன் வசதி இல்லை. பீடித் தொழிலைத் தவிர்த்து பெண்கள் வேறு வேலைக்குச் செல்லும் வகையில் தொழிற்சாலைகள் போன்றவை அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களும் வேலைவாய்ப்பு இன்றி உள்ளனர். விவசாயிகள், சிறு தொழில் செய்பவர்களில் வங்கிகளில் எளிதாகக் கடன் வசதி பெறும் வகையில் நடவடிக்கை எடுத்தால் அவர்களும் வாழ்வில் அடுத்த நிலை செல்ல ஏதுவாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

செண்பகவல்லி தடுப்பணை கட்டும் கோரிக்கை நிறைவேறவில்லை: தரணி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ரத்தினவேலு கூறுகையில், "கேரள வனப்பகுதியில் உள்ள செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி ஜமீன், திருவிதாங்கூர் சமஸ்தானம் உடன்பாட்டில் கட்டப்பட்டது. இந்த தடுப்பணை மூன்று மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகின்றது. 30 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் இந்த தடுப்பணை நீரை நம்பி தான் உள்ளது. எம்ஜிஆர் காலத்தில் தடுப்பணை உடைப்பைச் சரி செய்ய 1985ஆம் ஆண்டு அளித்த வரைவோலையை 20 வருடங்களுக்குப் பின்னர் கேரள அரசாங்கம் திருப்பி அனுப்பி விட்டனர்.

தடுப்பணை உடைப்பைச் சரிசெய்ய வைக்கப்பட்ட கோரிக்கை நெடுங்காலமாகக் காத்திருப்பில் உள்ளது. இதுகுறித்து முன்பு ஆட்சி செய்தவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் எம்எல்ஏ, எம்பி என அனைத்து அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

தரணி சர்க்கரை ஆலையை மூடி 5 ஆண்டுகள் ஆகின்றது. 2018 - 2019 காலத்தில் வெட்டிய கரும்புக்கு சுமார் ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.23 கோடி வழங்கப்படாமல் உள்ளது. பணம் வழங்காமல் நிலுவையில் உள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆலை இயங்காமல் இருப்பதால் இங்குள்ள கரும்பு விவசாயிகள் தேனி, சிவகங்கையில் உள்ள ஆலைகளுக்குக் கரும்பை அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு டன் கரும்புக்கு ரூ.700 அதிகப்படியான போக்குவரத்துச் செலவும் ஏற்படுகிறது. தரணி ஆலையைத் திறப்பதன் மூலம் விவசாயிகள் அதிகப்படியான கரும்பினை பயிர் செய்யக் கூடிய வாய்ப்பு உருவாகும்" எனத் தெரிவித்தார்.

களவு போகும் கனிம வளங்கள்: சிவகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் கூறுகையில், "இந்த தொகுதியிலிருந்து அதிகமாகக் கனிம வளங்கள் புளியரை சோதனைச்சாவடி வழியாகக் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது. கனிம வளங்கள் இங்கிருந்து முறைப்படி கொண்டு செல்லப்படுகின்றதா? என்பது தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவது ஆளும் கட்சிக்குப் பின்னடைவாகத் தான் அமையும்" என்றார்.

தொகுதிக்காகக் குரல் கொடுத்துள்ளேன்: தென்காசி எம்.பி தனுஷ் எம்.குமார் கூறுகையில், "கடந்த ஐந்து வருடங்களில் மக்கள் எனக்குக் கொடுத்த பணியை நான் நிறைவாகச் செய்துள்ளதாக நம்புகிறேன். நாடாளுமன்ற பணிகளைப் பொறுத்தவரையில் 99% வருகை பதிவேட்டுடன் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் முழுவதுமாக பங்கேற்றிருக்கிறேன். என்னுடைய தொகுதிக்காகவும், பொதுவாகவும் 490 கேள்விகளை எழுப்பியுள்ளேன். 121 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். 5 தனிநபர் மசோதா தாக்கல் செய்திருந்தேன், அதில் இரண்டை தான் என்னால் கொண்டுவர முடிந்திருந்தது.

இங்கு விவசாயிகளின் முக்கியமான பிரச்சினையாக நான்கு வழிச்சாலை இருந்தது. விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து விவசாயிகள் என்னிடம் முறையிட்டனர். முதல் வேலையாக நாடாளுமன்றத்தில் அதுகுறித்து குரல் எழுப்பினேன். சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் அதுகுறித்து முறையிட்டதன் விளைவாக 60 மீட்டர் அகலம் இருந்த நான்கு வழிச்சாலை 40 மீட்டராக மாற்றப்பட்டது. அதனால் குறைந்தபட்சம் 350 ஹெட்டேருக்கு மேற்பட்ட நிலம் பாதுகாக்கப்பட்டது.

தென்காசியில் இருந்து 8 கி.மீ வெளியில் செல்லக்கூடிய இந்த நான்கு வழிச்சாலை செல்லக்கூடிய நிலையில், 8 கி.மீ தூரத்திற்குப் புதிதாக ஒரு நான்கு வழிச்சாலையை அந்த சாலையுடன் இணைக்கும் வகையில் கேட்டு வாங்கியுள்ளேன். புளியரையில் இருந்து கேரளா செல்லும் வழியில் உள்ள 'S' வளைவு காரணமாக மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனைச் சரிசெய்யும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போல சுழல் வடிவ மேம்பாலம் அமைக்க ரூ.150 கோடி மதிப்பில் திட்டவரைவு அனுப்பப்பட்டுள்ளது. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமையும்.

செண்பகவல்லி தடுப்பணை: இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான செண்பகவல்லி அணை பிரச்சினை குறித்து மூன்று முறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். நீர்வளத்துறையிடமும் பேசியுள்ளேன், அதன் விளைவாக தமிழகத்திலும் கேரளாவிலும் அதற்காக ஒரு குழு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டம் துவங்கிய புதிதில் ரூ.100 கோடி செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைக் குளக்கரை பகுதியில் கடந்த அரசாங்கம் கொண்டு வந்தது. அதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசி மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்திற்கு அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைக் கொண்டு வந்துள்ளோம். விவசாயம் சார்ந்த தொகுதி என்பதால் அது சார்ந்த திட்டங்களுக்காக மத்திய அரசிடம் வலியுறுத்திய போதிலும், மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஆதாரங்களை வழங்காத காரணத்தினால் இந்த பகுதியிலும் நாங்கள் வைத்த கோரிக்கைகளை அவர்கள் செய்யவில்லை.

முதலில் பொதிகை ரயில் மட்டும் தான் இங்கு இயக்கப்பட்டது. ஆனால் இப்போது 7 முதல் 8 ரயில்கள் இரு மார்க்கமாகவும் சென்று வரும்படி ரயில்வே திட்டங்களை மேம்படுத்தியுள்ளேன். விருதுநகரிலிருந்து செங்கோட்டை வரை மின் மயமாக்க நாடாளுமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுத்ததன் விளைவாகக் கடந்த 2 மாதங்களில் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில் செல்லும் வகையில் செய்துள்ளோம்.

மத்திய அரசு இன்னும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தென்காசிக்குக் கொண்டு வந்திருக்க முடியும். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் திருப்தியாக பணியாற்றியுள்ளேன். எம்பி நிதியிலிருந்து நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் இருளால் பாதுகாப்பற்ற சூழல் நிலவிய இடங்களில் எல்லாம் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளேன்.

கனிம வள கடத்தலுக்கு நடவடிக்கை: இந்த பகுதியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். பல சமயங்களில் அவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிமவள கடத்தல் இனி நடக்காமல் தடுப்பதற்காக மேல்மட்ட அதிகாரிகளிடமும், மத்திய அரசாங்கத்திடமும் இதுகுறித்து பேசியுள்ளேன். எனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை ஐந்து ஆண்டுகளில் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

களம் காணக் காத்திருப்பவர்கள்: தென்காசி தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருந்தாலும் இம்முறையும் திமுகவே போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

திமுக: சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ராணி ஸ்ரீ குமார், தற்போதைய எம்.பி., தனுஷ் எம்.குமார் உள்ளிட்டோர் விருப்பம் தெரிவித்துள்ள உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரசும் தென்காசி தொகுதியைக் கைப்பற்ற வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் அருணாசலத்தின் அண்ணன் மகனான சங்கை கணேசன், காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் சங்கரகுமார் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனின் சமிஞ்கைக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிமுக: முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா ஆகியோர் அதிமுக தரப்பில் சீட் பெறுவதில் முனைப்பு காட்டுவதாகக் கட்சியினர் கூறினாலும், ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜக: பாஜக ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிரிவின் மாநில தலைவர் ஆனந்தன், மாநிலச் செயலாளர் பொன்.பாலகணபதி ஆகியோர் பெயர் இந்த தொகுதி வேட்பாளர் பரிசீலனையில் அடிபடுவதாகக் கூறப்படுகிறது. இருவரில், பொன்.பாலகணபதிக்கு வாய்ப்பு வழங்கப்படும்பட்சத்தில் ஆனந்தன் நீலகிரி தொகுதியில் களமிறக்கப்படலாம் எனவும் ஒரு கருத்து உலா வருகிறது.

ஏற்கனவே நீலகிரியில் களமிறங்குவார் என கருதப்பட்ட எல்.முருகன் ராஜ்யசபா பதவியைப் பெற்றதால் இந்த மாற்றம் நிகழலாம் என கூறப்படுகிறது. மேலும், தென்காசி நாடாளுமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் மகாராஜன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவநாதன், கடைநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் ரேவதி கபாலீஸ்வரன் உள்ளிட்டோர்களும் கமலாலயத்தின் கடைக் கண் பார்வைக்காகக் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாம் தமிழர்: வழக்கம் போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மதிவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு 4வது இடம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில் மதிவாணன் ஏற்கனவே பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல்: மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் செய்ததும்..! செய்யத் தவறியதும்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.