ETV Bharat / state

'இந்தியாவில் மோடிதான் ஹிட்லர்?' - விசிக விருது வழங்கும் விழாவில் முத்தரசன் குற்றச்சாட்டு - VCK Awards

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 11:56 AM IST

CPI Mutharasan: பிரதமர் மோடி மாநிலத்திற்கு மாநிலம் பபூன் மாதிரி வேடமணிவதாக, மோடி இந்தியாவில் வாழும் ஹிட்லர் எனவும், பல் இல்லாத பாம்பாக இந்திய தேர்தல் ஆணையம்  இருப்பதாகவும் விசிக விருது வழங்கும் விழாவில் 'மார்க்ஸ் மாமணி விருது' பெற்ற முத்தரசன் தெரிவித்துள்ளார்.

விசிக விருது வழங்கும் விழாவில் 'மார்க்ஸ் மாமணி விருது' பெற்ற முத்தரசன்
விசிக விருது வழங்கும் விழாவில் 'மார்க்ஸ் மாமணி விருது' பெற்ற முத்தரசன் (Credits - Thirumavalavan)

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு 'மார்க்ஸ் மாமணி விருது' வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பேசிய முத்தரசன், '...அவர்கள் சொல்வதை கேட்காவிடில், கொலை செய்வார்கள். அதைத்தான் ஜெர்மனியின் ஹிட்லர் செய்தார். அந்த ஹிட்லர், தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஹிட்லர் சாகவில்லை; இந்தியாவில் இருக்கும் மோடி தான் ஹிட்லர். அடுத்தடுத்த கட்டங்களில் வெற்றிபெற முடியாது என்ற நிலை வந்தபோது, தன்னை ஒரு கடவுளாக, 'நான் ஒரு கடவுள்' என சொல்ல ஆரம்பித்துவிட்டார். எல்லோரும் கோயில் கட்டவேண்டியதுதான்.

தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட 39 பேருக்கும் வெற்றி உறுதி. மாமன்னர் என மோடியை பிரகாஷ்ராஜ் குறிப்பிடுகிறார். அது மிகவும் சரியே. தேநீர் விற்றவர் அணியும் உடையா அணிகிறார் மோடி. மாநிலத்திற்கு மாநிலம் பபூன் மாதிரி விதம் விதமாக வேஷம் போட்டு உடை அணிகிறார். திமுக இருக்காது, காங்கிரஸ் இருக்காது என மாற்றி மாற்றி பேசுகிறார். பிரதமர் தரம் தாழ்ந்து, நான்காம் தரமாக பேசுகிறார். நான்கு, ஐந்து கட்டங்களாக நடந்த தேர்தலில் வெற்றி கிடைக்காது என்றதும், நானே கடவுள் என்கிறார். 7ஆம் கட்ட தேர்தலுக்குள் என்ன சொல்வார் என தெரியாது.

வெறித்தனத்தில் மோடி பேசி வருகிறார். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம், பல் இல்லாத பாம்பாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளில் தோற்றவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க கூடும். எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல இந்நிகழ்ச்சியில், அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜ்க்கும், பெரியார் ஒளி விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், காமராசர் கதிர் விருது இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்திற்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது பேராசிரியர். ராஜ்கௌதமனுக்கும், காயிதேமில்லத் பிறை விருது வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மேனாள் மாநிலத் தலைவர் எஸ்.என். சிக்கந்தருக்கும், செம்மொழி ஞாயிறு விருது கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலுவிற்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னையில் கொலை மிரட்டல்! - Narendra Modi Life Threat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.