ETV Bharat / state

கொலை வழக்கில் இருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ உள்ளிட்ட 12 பேர் விடுதலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 3:37 PM IST

DMK EX MLA Ranganathan: கொலை வழக்கிலிருந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேரை விடுதலை செய்து சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

DMK EX MLA Ranganathan
கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன்

சென்னை: சென்னையில் உள்ள கொளத்துார் காமராஜ் நகர் அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். மாற்றுத் திறனாளியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

நிலத் தகராறு தொடர்பான பிரச்சனையில் நடந்த இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொளத்துார் காவல் நிலையத்தினர் சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதனின் துாண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆனால், குற்றப்பத்திரிக்கையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி புவனேஸ்வரனின் தந்தை சிவா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ததுடன், டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சிபிஐ விசாரணை நடத்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணையை நடத்திய சிபிஐ, திமுக முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த இந்த வழக்கில், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் ஆகியவை முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் இன்று(பிப்.26) தீர்ப்பளித்த நீதிபதி கே.ரவி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி சிபிஐ காவல் துறை நிரூபிக்கவில்லை எனக்கூறி, முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 12 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுரை-சோழவந்தான் ரயில்வே மேம்பாலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.