ETV Bharat / state

பணிப்பெண் விவகாரம்; பிப்.6-இல் ஜாமீன் மனு மீது தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 8:00 PM IST

Pallavaram DMK MLA's son and daughter-in-law issue: வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, பிப்ரவரி 6ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அளிக்க உள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மர்லினா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கடந்த ஜனவரி 25ஆம் தேதி தனிப்படை போலீசாரால் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இருவரும், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், “பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. குடும்ப உறுப்பினர் போல பணிப்பெண்ணையும் நடத்தினோம். அவரை கல்லூரியில் சேர்த்து, அதற்கான கட்டணத்தையும் தாங்களே செலுத்தியதாகவும்” மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், பணிப்பெண்ணின் கல்விச் செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் மனுதாரர்கள் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எம்எல்ஏ மகன் என்பதால் இந்த விவகாரத்தில் சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, போலீசார் அவசர கதியில் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை டிஎஸ்பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரிய வரும் எனவும், வீட்டு பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில், இந்த பெண்ணுக்கு இதுவரை 1 ரூபாய் கூட வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. போக்சோ பிரிவிலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கூறிய பாதிக்கப்பட்ட பெண் தரப்பு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பக்கம் பெரிய நபர்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, காவல்துறை சார்பில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினர். இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீது பிப்ரவரி 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பணிப்பெண் தாக்குதல் வழக்கு: சிறுமியின் பள்ளிச் சான்றிதழ், ஆறு மாத சம்பள பாக்கி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.