ETV Bharat / state

திடீரென முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம் - காரணம் என்ன? - Chennai pet license

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 2:17 PM IST

Chennai pet license: கடந்த ஒரு வாரத்தில் 1,165 செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கியுள்ள நிலையில், இந்த உரிமத்தை ஆன்லைனில் வழங்கும் மாநகராட்சியின் இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது.

chennai corporation website photo
சென்னை மாநகராட்சி இணையதளம் புகைப்படம் (Credits - chennai corporation)

சென்னை: கடந்த 5ஆம் தேதி நுங்கம்பாக்கம் 4வது தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் பூங்காவை பராமரித்து வரும் சோனியா என்பவரின் 5 வயது மகளான சுரக்‌ஷா என்பவரை பூங்காவின் எதிரில் வசிக்கும் புகழேந்தி வளர்த்துவரும் 2 ராட்விலர் இன நாய்கள் அவரின் மேற்பார்வை இல்லாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து பூங்காவில் இருந்த குழந்தையை கடித்து குதறியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையும், பின்னர் அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனையில் மேல்சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வை தொடர்ந்து செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் அதற்கான பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்று இருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது கழுத்துப் பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்லக்கூடாது.

வெளி நபர்களிடம் அச்சம்மூட்டும் வகையிலும், திடீரென பாயும் தன்மைகொண்ட நாயாக இருந்தால் அந்த நாய்களை கட்டுப்பாடின்றி மற்றும் முகமூடி (Muzzle) இல்லாமல் வெளியே கொண்டு செல்லக்கூடாது. மேலும் தெருக்களிலோ, பொது இடத்திலோ ஒரேயொரு செல்லப்பிராணியை குறிப்பாக ஒரேயொரு நாயை மட்டுமே அதன் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருத்தல் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே பூங்காக்களுக்குள் அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். தெரு நாய்கள் அல்லது கட்டி வைக்கப்படாத செல்லப் பிராணிகள் உள்ளே நுழைவது தடுக்கப்படும்.

பூங்காக்களில் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதிக்கு வளர்ப்பு நாய்களை எடுத்துச் செல்வதும் தடை செய்யப்படும். இந்திய பிராணிகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் தொடர்ந்து ஆபத்து ஏற்படும் வகையில் செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அவற்றை கையாண்டால், அந்த நாயின் உரிமையாளரின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநகாரட்சி சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கு, சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற, அதன் உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இதற்காக அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்னும் இணையதளத்திலஸ் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து நான்கு இலக்க எண்ணை உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.

அதில், செல்லப்பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளர் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப்பிராணியின் புகைப்படம், ஒரு வருடத்திற்குள்ளாக வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி அளித்த பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதன் பிறகு உரிமையாளர்கள் தங்களது பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள பக்கத்தில் உள்ள இணைய முகப்பு பக்கத்திற்கு சென்று இணைய வழியில் 50 ரூபாய் பணம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் செல்லப்பிராணிகளின் உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு உருவாகும்.

அதனை கொண்டு செல்லப்பிராணிகளின் உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் 3,000 பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் முதல்கட்டமாக 1,165 செல்லபிராணிகளுக்கு லைசென்சை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. இந்நிலையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற ஆன்லைனில் அதிகமான உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பது வருகின்றனர்.

இதன் காரணமாக, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் மாநகராட்சியின் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு முடங்கியுள்ளது. தொழில்நுட்ப பிரச்சனை இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: போக்குவரத்து போலீசுடன் வாக்குவாதம்: வாகன ஓட்டி மீது பாய்ந்தது வழக்கு! - CHENNAI TRAFFIC POLICE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.