ETV Bharat / state

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக கூறப்பட்ட விவகாரம்; 3 பேருக்கு சிபிசிஐடி சம்மன்! - pudukkottai water tank issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 3:06 PM IST

sangamviduthi caste discrimination: புதுக்கோட்டை குருவாண்டான்தெரு குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுபடி, சிபிசிஐடி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

குடிநீர் தொட்டி புகைப்படம்
குடிநீர் தொட்டி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், சங்கன்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான் தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் மாதிரியை சேகரித்த ஊரக வளர்ச்சித் துறை அதனை திருச்சியில் உள்ள குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பினர்.

அதில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாததால் உருவான பாசிதான் பச்சை நிறத்தில் படர்ந்திருக்கலாம் என தெரிய வந்தது. மேலும், பரிசோதனையின் முடிவுகளில், அந்த குடிநீரில் மாட்டுச்சாணம் உள்ளிட்ட எந்தவித கிருமிகளும் கலக்கப்படவில்லை எனவும், அந்த நீர் குடிக்க உகந்த நீர் எனவும் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.

இதனால் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருந்த போதிலும், இந்த விவகாரத்தில் காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், ஒரு தலைபட்சமாக விசாரித்துள்ளனர் என்றும், இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் எனவும் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றியும், இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து ஜூன் 4-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கடந்த மே 15ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர். ஏற்கனவே போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக சண்முகம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஒரு சிஎஸ்ஆர் பதிவும், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் அளித்த புகார் அடிப்படையில் ஒரு சிஎஸ்ஆர் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குருவண்டான் தெரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தலைமையில், சிபிசிஐடி டிஎஸ்பி சதீஷ்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட பொதுமக்களிடையே தங்களது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், குறுவாண்டான் தெருவில் விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார், நீதிமன்ற உத்தரவுபடி புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை உள்ளதா, சாதிய பாகுபாடுகள் உள்ளனவா என்பதையும் சோதனையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற சிபிசிஐடி விசாரணையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் சொமேட்டோ ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... ஐந்து பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு! - Chennai CCTV Viral

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.