ETV Bharat / state

'தமிழகத்தில் ஏப்.20-ல் தேர்தல் நடக்க வாய்ப்பு'- ஹெச்.ராஜா கூறிய முக்கிய தகவல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 9:06 AM IST

H.Raja: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அரை டஜன் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் எனவும், பாஜக கட்சி தமிழகத்தில் முன்னேறி வருவதாகவும், இதனால் வரும் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வரும் எனவும் ஹெச்.ராஜா கூறினார்.

H.Raja
ஹெச்.ராஜா

கோவையில் ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவையில் பாஜகவின் மாநில நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்.4) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆயிரம் பேசினாலும் அயோத்தி 'ராமஜென்ம பூமி'-யில் ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக உதவிகள் செய்யும் என்று கூறியதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழுமன திருப்தியோடு நிறைவேற்றியுள்ளது. இதனால், மக்களிடையே நல்ல எண்ணம் உருவாகி இருக்கிறது.

இன்றைய தினத்தில் இருந்தே 'கிராமம் செல்வோம் நிகழ்ச்சி' துவங்கியிருக்கிறது. ஒருவார காலத்திற்குள் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியலுக்கு திசைக்கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அது எல்.கே.அத்வானி தான். பாஜகவை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர் இவர். அரசாங்கம் அவருக்கு 'பாரத ரத்னா விருது' கொடுப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளது. மேலும் கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற பணியாளர்கள் இதன் மூலம் உற்சாகம் பெற்று தேர்தல் பணியாற்ற தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியா கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது குறித்த கேள்விக்கு, "அப்படி ஒரு கூட்டணி இல்லை என்பதில் ஒரு பெரிய புரிதல் நமக்கு வராமல் இருந்தது. I.N.D.I.A என்ற புள்ளி வைத்த கூட்டணியாக இருந்ததை தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதன் கன்வீனரே அதில் இல்லை என்ற அளவிற்கு உள்ளதென்றால், அதற்கு குறிக்கோள் இல்லாமல் அமைகின்ற கூட்டணிகள் நிலைக்காது என்பதே காரணம்.

மோடியை நீக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக வைத்திருந்தனர். அதைத் தவிர்த்து வேறு ஏதேனும் குறிக்கோள்கள் இருக்கிறதா? அஜெண்டா ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால் அதுவும் இல்லை. அதனால் தற்போது, அந்த கூட்டணியே திசைத் தெரியாமல் போனது. மேலும், அந்த கூட்டணியில் இருக்கும் முக்கியமான கட்சியின் தலைவரான மம்தாவே, 'காங்கிரஸ் கட்சியினர் 40 சீட்டுகள் கூட ஜெயிக்க மாட்டீர்கள்' என்கிறார் என்றால் அவர்களின் லட்சணம் என்னவென்று அவர்களுக்குள்ளேயே தெரிந்து வைத்துள்ளார்கள்' என்று குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், 'நடிகர் விஜய் தொடங்கிய கட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அது பற்றி தற்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. சட்டமன்றத் தேர்தலில் அது குறித்து விவாதிக்கலாம். மேலும் விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் எனத் தெரிகிறது. அதனை வரவேற்று, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிலளித்தார்.

தமிழ்நாட்டில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், அதனை விமர்சிக்க வேண்டி இருப்பதாகவும்; அதிமுக ஆளும் கட்சியும் இல்லை, எதிர்க்கட்சியும் இல்லை எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி பாஜக, எதிர்க்கட்சி காங்கிரஸ். அந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி என்பதால் பாஜக, திமுகவை அதிகமாக விமர்சிக்க வேண்டி இருப்பதாகவும்; அதிமுக அந்த இடத்தில் இல்லை என்பதால் விமர்சனம் கொஞ்சம் கம்மியாக இருக்கலாம்' எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், '1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி ஜெயலலிதாவைப் பார்த்தார்கள் அப்போது ஜெயலலிதா பாஜக வெல்லும் எனக் கூறினார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என்பதும் சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது எல்லாம் வெறும் கற்பனை எனப் பேசினார். கமலஹாசன் திமுகவில் சேரலாம் எனக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு, "மக்கள் நீதி மய்யம் தலைவர் கட்சி துவங்கியபோது ஊழலுக்கு எதிர் எனக் கூறினார்

ஆனால், திமுகவில் தேர்தல் நடக்க இருக்கும் இந்த 60 நாட்களுக்குள்ளே அரை டஜன் அமைச்சர்கள் உள்ளே போனாலும் போகலாம். இதன் மூலம் கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் பொழுது பேசியதெல்லாம் வெற்று வார்த்தைகள். கமலஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கமல் ஊழலுக்கு எதிரானவர் இல்லை. கமல் ஊழலுக்கு உடன் போபவர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: இயக்கத்தில் இமயம் தொடும் பழங்குடியின பள்ளி மாணவர்கள்! அண்ணா பல்கலைக்கழக குறும்பட விழாவிற்கு தேர்வான மாணவர்களின் படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.