ETV Bharat / state

யானையை விரட்டச் சென்ற பல்கலை காவலாளியை துரத்திய யானை.. கீழே விழுந்த அதிர்ச்சியில் உயிரிழந்த சோகம்! - Elephants in Bharathiyar University

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 4:45 PM IST

Bharathiar University watchman dead after elephant chased: பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நின்றுகொண்டிருந்த காட்டு யானையை துரத்தியபோது பதற்றத்துடன் தப்பியோடிய நிலையில் கீழே விழுந்த பல்கலைக்கழக காவலாளி அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்த காவலாளி மற்றும் போலீசார் விசாரணை புகைப்படம்
உயிரிழந்த காவலாளி மற்றும் போலீசார் விசாரணை புகைப்படம் (PHOTO CREDIT- ETV BHARAT TAMIL NADU)

கோயம்புத்தூர்: வனத்தை ஒட்டி உள்ள பாரதியார் பல்கலைக்கழக பகுதியில் இன்று (மே 23) திடீரென புகுந்த காட்டு யானை ஒன்று, காவலாளிகளை விரட்டியதில் அதிர்ச்சியடைந்த காவலாளி சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மருதமலை மற்றும் தொண்டாமுத்தூர் வனப் பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த யானைகள் மலை அடிவாரப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வரும் நிலையில், வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (மே 22) மருதமலை, சோமையம்பாளையம் பகுதியில் 13 யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகளை வனத்துறையினர் அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முட்புதரில் யானை நிற்பதாக காவலாளிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவலாளிகள் சுரேஷ், சண்முகம் ஆகியோர் அங்கே சென்று யானையை விரட்ட முயன்றுள்ளனர். அப்போது திடீரென ஒற்றை ஆண் காட்டு யானை அவர்களை தாக்க முற்பட்டு விரட்டி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், யானையிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடியபோது கீழே விழுந்துள்ளனர். இதில் சண்முகம் அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சுரேஷ் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பழனியை ஒட்டியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்.. விவசாயிகள் வேதனை! - Elephant Atrocities In Palani

இதேபோல் யானை வந்த தகவலை அறிந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் லட்சுமண பெருமாள் சாமி, சுற்றுச்சூழல் துறை முன்பு நின்றுகொண்டிருந்தபோது, யானை பிளிரிய சத்தத்தைக் கேட்டு பயத்தில் கீழே விழுந்ததில், அவருக்கும் காயம் ஏற்பட்டதால் அவரையும் மீட்டு வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “நேற்று இரவு முதல் அதிகாலை வரை யானைகள் நடமாட்டம் குறித்த தகவல் இருந்ததால் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில் அனைத்து யானைகளும் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், வனப் பணியாளர்கள் யானை கணக்கெடுப்பு பணிக்காக வனத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

யானைகள் நிற்பதை அறிந்த காவலாளிகள், அதனை விரட்ட முயன்றதில், யானை கோபமடைந்து அவர்களை விரட்டியுள்ளது. வனத்தை ஒட்டி பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றாததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தால் அதனை சுயமாக விரட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் வந்து விரட்டுவார்கள்” என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பிடிபட்ட சிறுத்தை குறித்து நெகிழ்ச்சியோடு வீடியோ பதிவிட்ட சுப்ரியா சாகு! - Supriya Sahu IAS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.