ETV Bharat / state

கூவத்தூர் விவகாரம்; ஏ.வி ராஜுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மனுத் தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 8:41 PM IST

Koovathur Issue: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திப் பேசியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி ராஜூவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும், மான நஷ்ட ஈடு வழங்கவும் சேலம் அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திப் பேசியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சேலம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, கூவத்தூரில் தங்க வைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர் அளித்த பேட்டி சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்தச் சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்திப் பேசியதாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜூவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சேலம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தெரிவித்த இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ஏ.வி ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டுமெனத் தங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளதாகவும், அதிமுகவில் இத்தனை ஆண்டுகள் இருந்த ஏ.வி ராஜூ இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தைக் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிமுகவுக்கு என்று பிரத்தியேகமாகப் பெண்கள் ஆதரவு இருந்ததாகவும், ராஜூவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். ராஜூவின் இந்தப் பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, மான நஷ்ட ஈடாக 1 கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ராஜூவின் பேச்சை நீக்க வேண்டுமெனக் கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: கொலை வழக்கில் இருந்து முன்னாள் திமுக எம்.எல்.ஏ உள்ளிட்ட 12 பேர் விடுதலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.