ETV Bharat / state

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து.. அதிகாரிகள் விசாரணை! - Chennai Airport fire accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 2:52 PM IST

Chennai Airport ATC Tower Fire Accident: சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையான ஏடிசி டவரில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chennai Airport file photo
சென்னை விமான நிலைய கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: விமான நிலையங்களில் 24 மணி நேரமும் இடைவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அலுவலகம் என்றால், விமான சேவைகளை ஒருங்கிணைக்கக்கூடிய ஏடிசி டவர் என்று அழைக்கக்கூடிய ஏர் டிராபிக் கண்ட்ரோல் அலுவலகமாகும்.

பொதுவாக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் விமான நிலையங்கள் வழியாக வான் வெளியைக் கடந்து செல்லும் விமானங்கள் உட்பட அனைத்து விமான சேவைகளையும் கண்காணித்து இயக்கி வரும் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடம்தான் இந்த ஏடிசி டவர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஏடிசி டவர் அனைத்து விமான நிலையங்களிலும் காணப்படும். அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் ஏடிசி டவரின் நான்காவது தளம் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் இன்று (மே 23) அதிகாலை 3.30 மணி அளவில், எதிர்பாராத் விதமாக திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது, ஏடிசி டவரில் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அடுத்து, சென்னை விமான நிலைய தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று, சுமார் 20 நிமிடங்களில் தீயை அணைத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது முதற்கட்டமாக, அந்த மொட்டை மாடியில் உள்ள அறையில் தேவை இல்லாத பழைய கழிவுப் பொருட்களை போட்டு வைத்திருந்ததாகவும், அந்த அறையில் ஏற்பட்டுள்ள மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஏடிசி டவரில் திடீரென்று ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் விமான கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆனாலும் இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய உயர் அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமல்லாது, சென்னை விமான நிலையத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிக அளவில் பாதுகாக்கப்படும் ஏடிசி டவரில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குருவாயூர் ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த கேரள நபர்கள்.. நெல்லையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.