திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசு (40) மற்றும் ஆனந்தி தம்பதி. இவர்களுக்கு நதியா (17), யோகேஷ் (15) மற்றும் பிரவீன் குமார் (11) என 3 குழந்தைகள் இருந்தனர். தமிழரசு தாசிரியப்பனூர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மூத்த மகளான நதியா வீட்டில் மிகவும் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்துள்ளார். நதியாவுக்கு என தனியாக அறையும் அவர்களது வீட்டில் உள்ளது. தற்போது, நதியா திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
![தற்கொலை தடுப்பு எண் தொடர்பான விழிப்புணர்வு படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-05-2024/21424625_suicide1.jpg)
இந்த நிலையில், ஐபிஎஸ் கனவோடு படித்து வந்த நதியா, சேலத்தில் நடக்கும் என்சிசி (NCC Camp) முகாமிற்குச் செல்ல வேண்டும் என தனது பெற்றோரிடம் கேட்டதாகவும், ஆனால் நதியாவின் பெற்றோர் செல்ல வேண்டாம் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால், நதியா சோகமாக இருந்துள்ளார். அதையடுத்து, நதியாவின் தந்தை மற்றும் தாய் வழக்கம்போல் சிக்கன் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் பாட்டி மட்டும் தனியாக இருந்த நிலையில், நதியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார், இறந்த மாணவி நதியாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது குடும்பத்தார், ஐபிஎஸ் ஆக வேண்டும் என குறிக்கோளாக தனது மகள் படித்து வந்ததாகக் கூறி கதறி அழுதனர். இதற்கிடையே நதியாவின் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாட்றம்பள்ளி போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது!