ETV Bharat / sports

பும்ராவின் அதிரடியால் சுருண்ட இங்கிலாந்து..! வலுவான நிலையில் இந்தியா! வெற்றி வேட்கை தொடருமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 5:41 PM IST

ind vs eng: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்து உள்ளார்.

Ind Vs Eng
Ind Vs Eng

விசாகப்பட்டினம்: இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (பிப். 2) துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்து இருந்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன், ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 2ஆம் நாள் ஆட்டம் இன்று (பிப். 3) தொடங்கிய நிலையில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - அஸ்வின் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ரன் வேகத்தை சீரான இடைவெளியில் கொண்டு சென்றனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் தனது கன்னி இரட்டை சதத்தை விளாசி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பும்ரா 6 ரன்களிலும், முகேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 112 ஓவர்களில் இந்திய அணி 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் ஜெய்ஸ்வாலை தவிர மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் 35 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடக்கது. இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அகமது, ஜோரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது.

இங்கிலாந்து வீரர்கள் ஜாக் கிராலி - பென் டக்கெட் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பென் டக்கெட் 21 ரன்கள் எடுத்து இருந்த போது குல்தீப் யாதவ் வீசிய பந்தில் ரஜத் படிதாரிடம் கேட்ர் கொடுத்த வெளியேறினார். மறுபுறம் நிலைத்து ஆடிய ஜேக் கிராலி 76 ரன்களுகு வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஒல்லி போப் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 23 ரன்களுக்கு ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் கிளின் பேல்ட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோ ரூட் 5 ரன், ஜானி பேர்ஸ்டோ 25 ரன்களுக்கு அடுத்தடுத்து வெளியேறினர்.

மற்றொருபுறம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திருப்பினர். மொத்தமாக 55 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை சேர்த்துள்ளது. இதுவரை இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பும்ரா சாதனை: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா, அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்து உள்ளார்.

இதையும் படிங்க: “நாங்களும் ஆட்டத்துக்கு வரலாமா..” இலங்கை-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் குறுக்கிட்ட உடும்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.