ETV Bharat / entertainment

"என்னை எதிர்க்க எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை" - இயக்குனர் பா.ரஞ்சித்! - director Pa Ranjith

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 2:04 PM IST

Updated : Apr 13, 2024, 3:16 PM IST

Director Pa Ranjith: சாதியை எதிர்த்தவர்கள், சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணர வேண்டும் என்றும் என்னை எதிர்ப்பதற்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் பிகே ரோசி திரைப்பட விழாவில் தெரிவித்துள்ளார்.

Director Pa Ranjith
இயக்குனர் பா ரஞ்சித்

சென்னை: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக அறியப்படுபவர் பா.ரஞ்சித். இவரது படங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கும். இயக்கம் மட்டுமின்றி தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் வெற்றிப் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தை, தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடும் விதமாக, இவரது நீலம் பண்பாட்டு மையம் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இதன் ஒருங்கிணைக்கும் 4 ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" வின் ஒரு பகுதியாக, பிகே ரோசி(PK Rosy) திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதில், பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள்.

முதல் நாள் நிகழ்வு: திரைக்கதையாசிரியர் ஜா.தீபா தொகுத்த "சமூக சிந்தனை" எனும் தலைப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், இயக்குநர் கௌதம்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன், "திரைத்துறையில் இயக்குநர் பா. ரஞ்சித் அவர்களின் வருகை, மிக எளிதாக சமூக சிந்தனை கொண்ட திரைப்படம் எடுப்பதற்கு வழிவகுத்தது" என்றார். இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் "ஒரு வட்டத்திற்குள் அடங்கிக் கொள்ளாமல் திரை பார்வையை விரிவடையச் செய்ய வேண்டும்" என்றார். இறுதியாக இயக்குநர் கௌதம் ராஜ், "சமூக அரசியல் என்பது என் வாழ்வில் கலந்த ஒன்றாகும்" என்றார்.

இரண்டாம் நாள் நிகழ்வு: ‘மாடர்ன் சினிமா’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில், இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, பி.எஸ். மித்ரன், தரணி ராசேந்திரன் ஆகியோர்கள் பங்குபெற்றனர். இதில், இயக்குநர் ஜியோ பேபி, “ ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் அரசியலுக்கும், சமூகத்தில் நடக்கும் அரசியலுக்கும் இடையேயான தொடர்பு என் சினிமாவின் பிரதிபலிப்பு” என்றார்.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் பேசுகையில், “சாதிய சிந்தனைகளை ஊக்குவிக்கும் அடிப்படையில் எடுக்கப்படும் படங்களைப் பார்க்கும்போது மிகவும் கேளிக்கையாக இருக்கிறது” என்று விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து, “இயக்குநர் ஹலிதா ஷமீம், “ தன்னுடைய படைப்புகளில் காட்சிப்படுத்தப்படும் கதாபாத்திரம் ஒருபோதும் தவறான சித்தரிப்பில் உருவாகாது” என்றார். இயக்குநர் தரணி இராஜேந்திரன் யாத்திசை ஒரு உலக சினிமா எனவும் அதில் அவர் பழந்தமிழ் மொழியைப் பயன்படுத்தியதாக” கூறினார்.

மூன்றாம் நாள் நிகழ்வு: இறுதிநாளில் ‘மாமன்னன்’ படம் திரையிடப்பட்டு, அப்படத்தின் இயக்குநர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர் உள்ளிட்டோர் பார்வையாளர்களோடு கலந்துரையாடினர். அப்போது பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "என் படத்தைப் பார்ப்பதன் மூலம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான கேள்விகள் எழும், அவற்றுடன் விவாதம் செய்யுங்கள்" என்றார்.

அதன் பிறகு, இயக்குநர், எழுத்தாளர் ஜோதி நிஷாவின், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நவ் & தென் (Ambedkar now and then) ஆவணப்படம் மற்றும் இயக்குநர் ரிந்து தாமஸ் மற்றும் சுஷித் கோஷ் ஆகியோர்கள் இயக்கிய ரைட்டிங் வித் ஃபயர் (Writing with Fire) ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இதனையடுத்து, ‘தலித் சினிமா’ எனும் தலைப்பில், இயக்குநர்கள் பா.இரஞ்சித், ஜெயகுமார், பிஜு தாமோதரன் ஆகியோர்கள் கலந்துரையாடினர். இதில், இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “சாதியை எதிர்த்தவர்கள், சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணர வேண்டும். என்னை எதிர்ப்பதற்காக எடுக்கப்படும் படங்களில், கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை” என்று விமர்சித்தார்.

இயக்குநர் ஜெயகுமார், “ புத்தரும் அவரது தம்மமும் நூல், தன் படங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறது” என்றார். இயக்குநர் பிஜு, “ என் கதையை என் வாழ்வியலின் அடிப்படையிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என் படங்களும் இருக்கும்” என்றார். இறுதியாக, இயக்குநர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தோசை, இட்லி இருக்கட்டும் தமிழைப் பிடிக்குமா? தமிழர்களுக்கு என்ன செய்தீர்கள்? - ராகுல் காந்தி சரமாரி கேள்வி - Lok Sabha Election 2024

Last Updated :Apr 13, 2024, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.