ETV Bharat / education-and-career

சென்னை ஐஐடியில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு! - IIT Madras

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 5:10 PM IST

IIT Madras Employment for students: 2024 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, சென்னை ஐஐடியில் நடப்பாண்டில் 80 சதவீத்திற்கும் மேற்பட்ட பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75 சதவீதத்திற்கும் அதிகமான முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் இருப்பது போன்ற புகைப்படம்
மாணவர்கள் இருப்பது போன்ற புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களில் 90 சதவீதம் பேர், கடந்த இரண்டாண்டுகளாக பிடெக் மற்றும் இரட்டைப் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நடைபெறும் நேரத்திலேயே வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். 2024 பட்டமளிப்பு விழாவிற்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நடப்பாண்டிலும் சென்னை ஐஐடி இந்த சாதனையைப் படைக்க உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவு புதிததாக துவக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, சென்னை ஐஐடியில் நடப்பாண்டில் 80 சதவீத்திற்கும் மேற்பட்ட பிடெக், இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும், 75 சதவீதத்திற்கும் அதிகமான முதுகலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 2023-24ம் ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக (campus interview) வேலைவாய்ப்புகளின்போது 256 நிறுவனங்களில் 1,091 பேர் பணியமர்த்தப்பட்டனர். இதுதவிர, மொத்தமுள்ள 300 முன்வேலைவாய்ப்பு பணிகளுக்கு 235 பேர் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

சர்வதேச அளவில் வாய்ப்பு: முதல் மற்றும் இரண்டாம் கட்ட வளாக வேலைவாய்ப்புகளின்போது ஜப்பான், ஐரோப்பா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் 44 சர்வதேச வாய்ப்புகளையும், 85 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளன. இவ்வாறு பணியமர்த்தப்பட்ட 43 சதவீதம் பேர் முக்கிய துறைகளிலும், 20 சதவீதம் பேர் மென்பொருள் துறையிலும், 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் பகுப்பாய்வு, நிதி, ஆலோசனை மற்றும் தரவு அறிவியல் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர்.

பிஎச்டி ஆராய்ச்சியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை எடுத்துக்கொண்டால், பிஎச்டி என்பது வழக்கமான பாடநெறி அடிப்படையிலான படிப்பு அல்ல. அதற்கென குறிப்பிட்ட கால அளவும் கிடையாது. எனவே அவர்களின் வேலைவாய்ப்புக்கான காலஅளவு பாடநெறி அடிப்படையிலான பாடத்திட்டத்திற்கு பொருந்தாது. பிஎச்டி மாணவர்கள் பலரும் தங்களின் பிஎச்டி ஆய்வறிக்கையை பட்டமளிப்புக்கு நெருக்கத்தில் நிறைவு செய்கின்றனர்.

ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவு: அவர்களில் பலருக்கு பட்டமளிப்பு முடிவடைந்த சில மாதங்களிலேயே வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவில் பெரும்பாலான பிஎச்டி மாணவர்கள், ஆராய்ச்சியை மேலும் தொடர்வதையோ அல்லது ஆசிரியர் பணியையோ தேர்வு செய்கின்றனர். இதுதவிர, முக்கிய துறைகள் சிலவற்றில் நிபுணத்துவம் பெற்ற பிஎச்டி பட்டதாரிகளுக்கு, தொடர்புடைய குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் வேலைவாய்ப்பும் அமைகிறது.

இப்பிரச்சினையை முறையாகக் கையாளும் விதமாக, வரும் கல்வியாண்டு முதல் ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்புப் பிரிவு ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ஒப்பீடு அளவிலான சம்பளம் ரூபாய் 19.6 லட்சமாகவும் சராசரி ஊதியம் ரூபாய் 22 லட்சமாகவும் உள்ளது.

மாணவர்களின் வேலைவாய்ப்புகள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும் போது, “வேலைவாய்ப்புகளில் கடந்த ஆண்டின் போக்கே நடப்பாண்டிலும் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே சென்னை ஐஐடியில் படிக்கும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைப் பாதை பற்றி எந்தப் பெற்றோரும் கவலைப்படத் தேவையில்லை. வேலைவாய்ப்பு என்பது முக்கிய வாழ்க்கைப் பாதையாக இருந்தாலும், எங்களின் மாணவர்களில் அதிகமானோர் தொழில்முனைவைத் தேர்வு செய்து மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதையே விரும்புகிறோம். அடுத்த ஆண்டில் 100 டெக் ஸ்டார்ட்அப்களை உருவாக்குவதை நாங்கள் இலக்காக நிர்ணயித்து அதனை செயல்படுத்த உள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் படிப்பு... விண்ணப்பிப்பது எப்படி? - IIT MADRAS

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.