மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளம் இச்சாபூரில் உள்ள கன் அண்ட் ஷெல் ஆடிட்டோரியத்தில் ஆர்டினன்ஸ் போர்டின் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று விளையாடிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்பிதா நந்தி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அர்பிதா நந்தி (32) இச்சாபூரில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். ஆட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அர்பிதா சற்று சோர்வாகக் காணப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அர்பிதா தரையில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அர்பிதாவிற்கு மீட்டு முதலுதவி கொடுத்து கமர்ஹாட்டில் உள்ள சாகர் தத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அர்பிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று அர்பிதாவிற்கு உடற்கூராய்வு நடைபெறும் நிலையில் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் வயது டேபிள் டென்னிஸ் வீராங்கனையின் திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை போல் கடந்த ஜனவரி மாதம் நொய்டாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது 36 வயதான விகாஸ் நேகி என்கிற விளையாட்டு வீரர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே விளையாட்டு வீரர்கள் உயிரிழக்கும் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'AI' - ஜெயலலிதாவின் குரலில் ஈபிஎஸ் வெளியிட்ட ஆடியோ!