தமிழ்நாடு

tamil nadu

வைகை அணை நீர்மட்டம் அதிகரிப்பு.. 5 மாவட்டங்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 10:32 AM IST

5 மாவட்டங்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

தேனி:தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, கடந்த 2 நாட்களுக்கு முன்பு 66 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து, கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியபோது இரண்டம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், வைகை அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்ததால், இன்று காலை வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

வைகை அணை மதகுப் பகுதியில் அமைக்கப்பட்ட அபாய சங்கு மூன்று முறை ஒலிக்கப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை சார்பில் 5 மாவட்ட நிர்வாகத்திற்கும், பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தற்போது வினாடிக்கு 2,693 கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதால், வைகை அணை இன்னும் ஓரிரு நாளில் முழுக் கொள்ளளவாக நிர்ணயிக்கப்பட்ட 70 அடியை எட்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ABOUT THE AUTHOR

...view details