நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசனாகும். இந்த சீசனை அனுபவிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் கோடை சீசனின் முதலாவது நிகழ்ச்சியாக உதகை குதிரை பந்தயம் தொடங்கியது.
ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பம்சமாக விளங்கும் குதிரை பந்தயம் 136ஆவது ஆண்டை எட்டியுள்ளது. வரும் மே 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 17 பந்தயங்கள் நடத்த திட்டமிடபட்டுள்ளது. அதற்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 550 பந்தய குதிரைகள் வந்துள்ளன.
24 பயிற்சியாளர்கள் மற்றும் 37 ஜாக்கிகள் வந்துள்ளனர். இதில் நீலகிரி டர்பி கோப்பைகான பந்தயம் ஏப்ரல் 15ஆம் தேதியும், நீலகிரி தங்க கோப்பைகான பந்தயம் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று ரேஸ் கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று தொடங்கிய குதிரைப் பந்தயத்தை காண தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.