தமிழ்நாடு

tamil nadu

கேரளாவிற்கு செல்லும் தென்காசி கனிமவளங்கள்... ராட்சத லாரிகளை திருப்பிவிட்ட போலீசார்

By

Published : May 12, 2023, 8:15 PM IST

தென்காசி

தென்காசி: தென்காசியில் ராட்சத லாரிகளால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து தென்காசியில் இருந்து கேரளாவுக்கு மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச்சென்ற லாரிகளை தென்காசி போலீசார் திருப்பி அனுப்பினர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கேரளாவிற்கு கனிம வளங்களானது(மணல்) எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம், ஆலங்குளம், கடையநல்லூர், செங்கோட்டை, பண்பொழி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களானது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 

இந்தச் சூழலில், இந்த கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, போலீசார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி அதிக பாரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைப் பிடித்து அபராதம் விதித்தனர்.

இருந்தபோதும், சில ராட்சத லாரிகள் மூலம் கனிம வளங்களானது அளவுக்கு அதிகமாக கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த லாரிகளால் அதிகப்படியான விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகும் தொடர் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், இன்று (மே.12) தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகள் அனைத்தையும் மறித்து 10 டயர்களுக்கு கீழ் உள்ள லாரிகளை மட்டுமே போலீசார் கேரளாவிற்கு அனுமதித்து வருகின்றனர். அதேபோல், 10 டயர்களுக்கு மேல் உள்ள லாரிகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 42 டன் அளவுடைய பாரத்தை மற்றும் தாங்கக்கூடிய இந்த தேசிய நெடுஞ்சாலையில் 50 டன்களுக்கு மேலாக சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்டு வருவதால் சாலைகள் சேதமாவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்தும், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details