தேனி:கோடை வெயிலின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது சுருளி அருவி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கம்பம் நகர்ப் பகுதிக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை சுருளி வனப்பகுதியான சுருளிப்பட்டி பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்தது.
இதனால் சுருளி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அதைத் தொடர்ந்து கோடை வெயிலைத் தணிக்கச் சுருளி அருவிக்குச் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது.
ஆகையால் தற்போது கம்பம் பகுதியில் விதிக்கப்பட்ட 144 தடை நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சுருளி அருவியில் குளிப்பதற்கான தடையையும் வனத்துறையினர் தற்போது நீக்கி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சுருளி அருவிக்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்துள்ளனர். மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தைத் தனித்து உற்சாகமாகக் குளித்து வருகின்றனர்.