தூத்துக்குடி தேவாலயத்தில் பொங்கல் பண்டிகை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை!
Published : Jan 15, 2024, 10:24 PM IST
தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
தூத்துக்குடி புனித சூசையப்பர் தேவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க பொதுமக்கள் ஒன்றுகூடிப் பொங்கலிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் தூத்துக்குடியில் பெய்த கனமழையின் காரணமாகத் தூத்துக்குடி, ஏரல், ஸ்ரீ வைகுண்டம், புன்னக்காயல், பழைய காயல் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால், வீடுகளை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பவும் வரக்கூடிய வருடங்கள் நல்லபடியாக அமையவும் வேண்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து அதில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பொங்கல் சமர்ப்பணம் எனும் ஒரு வாக்கியங்களை எழுதி உலகில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக இருக்க வேண்டும் மேலும் இது போன்ற ஒரு பேரிடர் வரக்கூடாது என அனைவரும் ஒன்றுகூடி வழிப்பட்டனர்.