தொடர் மழையால் எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... ஆர்வத்துடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
Published : Sep 25, 2023, 6:59 AM IST
தேனி:மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழையால் எலிவால் அருவியில் ஆர்பரித்து கொட்டும் நீரை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை பெய்யாது போனது. இதனால் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் முற்றிலும் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் எலிவால் அருவியின் நீர் கொட்டும் அழகை காணாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அருவியில் நீர் வரத்து துவங்கி நீர் ஆர்பரித்து கொட்டுகின்றது.
தமிழகத்தில் உள்ள அருவிகளில் மிகவும் உயராமானது எலிவால் அருவி. இந்த அருவி கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் முதன் முதலில் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்சியுடன் எலிவால் அருவியை கண்டு செல்வது உண்டு. அருவியின் எழில் மிகு தோற்றத்துடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.