தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் கண் முன்னே ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 9:44 AM IST

ஆற்றில் அடித்து வரப்பட்ட பசு மாடு உயிருடன் மீட்பு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், வைகை அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தொடர் மழை காரணமாக காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து கொண்டதால், வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், வத்தலகுண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று (ஜன.9) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வைகை ஆற்றின் பாலத்தின் மீது நின்று தண்ணீர் வரத்து குறித்து பார்வையிட்டுக் கொண்டிருந்த நிலையில், கரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று, திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்து ஆற்று நீரில் தத்தளித்து வந்தது.

கண்முன்னே பசுமாடு ஆற்றில் அடித்து வரப்படுவதை கண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, உடனடியாக பொதுமக்கள் உதவியுடன், ஆற்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டார். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், கிராம மக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்து, வைகை ஆறு கரையோரம் விரைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார் .

ABOUT THE AUTHOR

...view details