ஈரோடு: சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இன்று (ஜூலை 19) நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், டிஜி புதூர், கடத்தூர், கோரமடை, பெரியூர், உக்கரம், காராப்பாடி, சிங்கிரிபாளையம், உடையாக்கவுண்டன்பாளையம், பவானிசாகர் உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,219 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
இந்த ஏலத்தில் கோவை, அன்னூர், அவிநாசி, புஞ்சை புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு மறைமுக முறையில் பருத்தியின் தரத்திற்கு ஏற்ப ஏலம் கூறினர். ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ.6736-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5853-க்கும் ஏலம் போனது.
மொத்தம் 3219 மூட்டை பருத்தி ரூ.65.56 லட்சத்திற்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து அதிகம் வந்துள்ளதாகவும், ஏலம் முடிந்தவுடன் பருத்தி விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பருத்தி ஏலத்தொகை செலுத்தப்பட்டதாகவும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.