தமிழ்நாடு

tamil nadu

Tiruvannamalai Annamalai Temple : அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா விமரிசை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 9:24 AM IST

அண்ணாமலை பெரிய நந்தி (கோப்புப்படம்)

திருவண்ணாமலை:ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு, "ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு" சிறப்பு ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொளர்ணமி மற்றும் அமாவாசை தினங்களுக்கு முன்பு நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, அபிஷேகத் தூள், மஞ்சள் தூள், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும், நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் பூ மாலை அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.

மேலும், பிரதோஷ தினத்தில் நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். எனவே, ஆவணி மாத பிரதோஷ தினத்தில், அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டு வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details