விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபின் அவரது குடும்பத்தாருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "எனது நெருங்கிய நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமாகியது வேதனை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கரோனா என்ற கொடிய நோய் வேகமாகப் பரவிவருகிறது. பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் எவையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போதுமான அளவில் கிடைக்கவில்லை என்ற தகவல் பரவுகிறது. அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.
மத்திய அரசு கரோனா தடுப்பூசி மருந்து கிடைக்க ஆவன செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை தாக்கும் அளவிற்கு மிக மோசமான நிலையில் பாஜக தேர்தலை அணுகுகிறது.
கொள்கை அரசியலை அணுகத் திராணியில்லாமல் தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது அல்லது குண்டர்களை ஏவித் தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் பாஜக இந்தியா முழுவதும் தேர்தல் நேரங்களில் ஈடுபட்டுவருகிறது.
மம்தா பானர்ஜி பரப்புரைக்குத் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருப்பதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.