தமிழ்நாடு

tamil nadu

சிறைக்கு சென்றிருக்கிறாரா.? - உதயநிதியை விளாசிய சிவி சண்முகம்

By

Published : Dec 16, 2022, 5:06 PM IST

அன்மையில் திமுக ஆட்சியை எதிர்த்து அதிமுக நடத்திய போராட்டத்தில் பேசிய எம்.பி. சி.வி. சண்முகம், உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விளாசியுள்ளார்.

உதயநிதியை விளாசிய சிவி சண்முகம்
உதயநிதியை விளாசிய சிவி சண்முகம்

உதயநிதியை விளாசிய சிவி சண்முகம்

விழுப்புரம்: செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்தும், பால் விலை, மின்சார கட்டண உயர்வு போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் அன்மையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், “காலம் காலமாக குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகிறது திமுக. சமீபத்தில், உதயநிதி ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர். அவர்கள் கூறுவதை நாங்கள் கேட்போம் என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். அண்ணா, பெரியார் எல்லாம் எங்கே போனார்கள். உதயநிதி கூறுவதை கேட்பீர்கள் என்றால், நயன்தாராவிற்கு சென்று பால் பாட்டில் வாங்கிக்கொடுங்கள்.

இப்போது நயன்தாராவிற்கு இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தயை பொன்முடியும், மற்றொரு குழந்தையை துரைமுருகனும் தாலாட்டுங்கள். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோரின் கால்களில் விழுந்து பதவிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார், பொன்முடி. மேலும் மற்றொரு அமைச்சர் செஞ்சி மஸ்தான். டீக்கடைகளில் உட்கார்ந்து அனுதினமும் டீ மட்டுமே குடிப்பது அவருடைய வேலை.

எடப்பாடி பழனிசாமி ஜமீன்தார் அல்ல. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒரு விவசாயி அவர். அதிமுக ஆரம்பித்த காலத்திலிருந்தே அடிப்படை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு முதலமைச்சராக வளர்ந்தவர். எங்கோ இருந்த சிவி சண்முகத்தை அமைச்சராக்கி அழகு பார்த்தவர், நமது புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா.

ஆனால், உதயநிதி என்ன செய்து இருக்கிறார். நாட்டு மக்களை விடுங்கள், திமுகவுக்காக உதயநிதி என்ன செய்திருக்கிறார். சிறைக்கு சென்றிருக்கிறாரா? போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா? யார் இந்த உதயநிதி? ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக நடிகைகளுக்கு பின்னால் சுற்றிக்கொண்டிருந்தவர் இவர்.

இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு அமைச்சராக ஆகி இருக்கிறா். இது வெட்கமாக இருக்கிறது. இதுதான் சுயமரியாதை இயக்கமா. திமுக சுயமரியாதை இப்போது உதயநிதி காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் உரங்களைக் கொடுத்தது. ஆனால், அதனை தற்போதுள்ள தமிழக அரசு உரங்களை தனியார் கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இதுதான் திராவிட ஆட்சியா?. மின்சார கட்டண உயர்வு பால் கட்டண உயர்வு 12 ரூபாய் இந்த அரசு உயர்த்தி இருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்று மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக மக்களே உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை அறைகளில் தனியாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒன்றரை ஆண்டு காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

பள்ளி கல்லூரிக்கு அருகிலேயே கஞ்சா மற்றும் போதைப் பொருள்களின் விற்பனை அமோகமாக விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் தற்போது கஞ்சா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, தயவு செய்து தாய்மார்கள் பெரியவர்கள் உங்கள் குழந்தைகளை முறையாக கண்காணியுங்கள்” என திமுக அரசையும் உதயநிதி ஸ்டாலினையும் கடுமையாக விளாசினார்.

இதையும் படிங்க: '5 மாசமா முதியோர் பென்ஷன் வரல' அரசை விளாசிய பாட்டியின் வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details