தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்தில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 22 பேர் வீடு திரும்பினர்!

By

Published : May 21, 2023, 9:06 AM IST

விழுப்புரத்தில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 48 நபர்களில் 22 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் 55 க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 48 பேர் பொது சிகிச்சைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

விஷச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் அவசர வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகளான, புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவைத் தொடர்ந்து இவ்வழக்கினை மரக்காணம் போலீசார் கொலை வழக்காக மாற்றினார்கள். இந்நிலையில் இவ்வழக்கானது தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் டிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்த வழக்கு ஆவணங்கள் டிஎஸ்பி கோமதியிடம் வழங்கப்பட்டது.

இந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் மே 19 ஆம் தேதி முதல் விசாரணையைத் தொடங்கினர். அவர்கள் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிபிசிஐடி, ஐஜி ஜோஷி நிர்மல் குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரத்தில் முகாமிட்டு இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறையினரையும், வருவாய் துறையினரையும் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சையில் இருந்த 48 நபர்களில் 22 பேர் நேற்று (மே 20) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:சொல்லுங்க சொல்லுங்க அப்றம்.! நொறுக்குத் தீனியுடன் கவுன்சிலர்களின் குறைகளை கேட்ட நகர்மன்றத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details