தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் சதம் அடித்தது கோடை வெயில்!

By

Published : Mar 27, 2023, 9:08 PM IST

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு முதன் முதலாக இன்று (மார்ச் 27) வெயில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் அளவைக் கடந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

வேலூர்: தமிழ்நாடில் கோடைக்காலம் என்பதால் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் வெயில் அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் கொளுத்தத் தொடங்கும் வெயில் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கடந்தாண்டுகளில் அதிகபட்சமாக 112 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருந்தது.

அதன்படி, நிகழாண்டு வெயிலின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதமே அதிகரிக்கத் தொடங்கியது. பிப்ரவரி 15ஆம் தேதிக்குப் பிறகு வெயில் அளவு படிப்படியாக உயரத் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் மாதத் தொடக்கத்தில் 90 டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்தது. பின்னர் படிப்படியாக வெயில் அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை 95.5 டிகிரியாக பதிவாகியிருந்தது.

இந்நிலையில், திடீரென இன்று வேலூர் மாவட்டத்தின் வெயில் அளவு நூறு டிகிரி ஃபாரன்ஹீட்டைக் கடந்து 100.4 டிகிரியாக பதிவானது. அதன்படி, வேலூரில் வெயில் அளவு 100.4 டிகிரியாக பதிவாகி இந்த ஆண்டு வெயில் சீசனில் முதல் சதத்தை எட்டியுள்ளது. முன்னதாக, காலை 11 மணி முதலே கொளுத்தத்தொடங்கிய வெயில் அளவு பகல் 1 மணிக்கு உச்சத்தைத் தொட்டது.

இதனால், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வெயில் அளவு அதிகரிக்கத்தொடங்கியதால் பகலில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை, நாமக்கல், பாளையங்கோட்டை ஆகியப் பகுதிகளில் 100 டிகிரி வெயிலும், கோவை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், மதுரை ஆகியப் பகுதிகளில் 97 டிகிரி வெயிலும் பதிவானது.

கோடைக்காலம் தொடங்கியதால் வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே உடலுக்கு குளிர்ச்சி தரும் பழச்சாறுக் கடைகள், கரும்புச்சாறு கடைகள், கூழ் கடைகள் மற்றும் தர்பூசணி, முலாம்பழம் ஆகிய பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மாநகராட்சிகள், நகராட்சிகள், வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு நிதி வழங்கியுள்ளதா?: வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details