தமிழ்நாடு

tamil nadu

குப்பைகளை அகற்றாவிட்டால் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் - எச்சரித்த அமைச்சர்

By

Published : Dec 7, 2022, 10:14 PM IST

வேலூர் பொன்னை அருகேயுள்ள தனியார் நிறுவனம் ஆற்றங்கரையில் குவித்துள்ள குப்பைகளை அகற்றாவிட்டால், அந்நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

குப்பைகளை அகற்றாவிட்டால் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் - துரைமுருகன் எச்சரிக்கை
குப்பைகளை அகற்றாவிட்டால் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை பாயும் - துரைமுருகன் எச்சரிக்கை

வேலூர்: காட்பாடி அருகே கழிஞ்சூரில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் எட்டு பணிகளுக்கு 139 கோடியே 21 லட்சம் மதிப்பில் ஏரிகள், தடுப்பணைகள் புனரமைப்பு மற்றும் ஏரிகளை சுற்றுலாத் தளமாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வேலூர் அருகே உள்ள சதுப்பேரி ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றவும், அணைக்கட்டு அருகே கீழ்அரசம்பட்டு அணை கட்டப்படவும் வரும் நிதியாண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாவட்டம் கழிஞ்சூர் ஏரி மற்றும் காட்பாடி ஏரி ஆகிய ஏரிகள், வீராணம் ஏரி போன்று சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால், அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் வரும் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கழிஞ்சூர் ஏரியில் படகு சவாரி, பார்வை தளம், வெளிநாட்டுப் பறவைகள் ஆகியவற்றைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஏரியின் நடுவில் செயற்கைத் தீவு போல அமைத்து, அதில் மரங்களை நடுதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் மற்றும் தரைப் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும். குடியாத்தம் அருகே கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட பத்தலபல்லி அணை, மீண்டும் வரும் நிதியாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் நீர்வளத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள் அதனை சரியாக செய்ய வேண்டும். தாங்களே நேரில் சென்று பார்வையிட்ட பிறகுதான், அந்தப் பணிகளுக்கான தொகையினை அலுவலர்கள் வழங்க வேண்டும்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

காட்பாடி அருகே விரைவில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டப்படும். வேலூர் மாவட்டம் பொன்னை அருகே தனியார் தொழிற்சாலை ஒன்று பாலாற்றங்கரையில் மலை போல் குப்பைகளைக் குவித்து வருவதால், அந்த நிறுவனத்தினர் உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாலாறு மற்றும் ஏரிகளில் குப்பைகளை கொட்டாமல், மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் பாரதி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details