வேலூர்:கே.வி.குப்பம் அடுத்த வடுங்கன்தாங்கள் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விநாயகம் (24). இவரும் குடியாத்தம் அடுத்த தர்ணம்பேட்டை சேர்ந்த சுப்ரஜாவும் (24) காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒன்னறை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், சுப்ரஜாவின் அத்தை தனலட்சுமி என்பவர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த 3 மாதங்களாக சுப்ரஜாவை தொடர்புகொள்ள முடியவில்லை, அவரை காணவில்லை. இது குறித்து அவரது கணவர் விநாயகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்காமல் விரட்டியடிக்கிறார். எனவே சுப்ரஜாவை கண்டுபிடித்து தரவேண்டும்” என கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் விநாயகத்தை காவல் துறையினர் அழைத்து விசாரித்தபோது அவர் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.
விநாயகமும்- சுப்ரஜாவும் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் விநாயகத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இது மனைவி சுப்ரஜாவுக்குத் தெரியவரவே இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தம்பதிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் விநாயகம் சுப்ரஜாவை தாக்கியுள்ளார்.