தமிழ்நாடு

tamil nadu

அரளவைக்கும் அதிநவீன கண்காணிப்பு வண்டி; சிறப்பம்சங்களைக் கண்டு அதிர்ந்த டிஜிபி

By

Published : Dec 2, 2022, 6:52 PM IST

வேலூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் காவல் கண்காணிப்பு வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபு பெற்றுக் கொண்டார்.

நடமாடும் காவல் கண்காணிப்பு வாகனத்தை பெற்றுக்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு!
நடமாடும் காவல் கண்காணிப்பு வாகனத்தை பெற்றுக்கொண்டார் டிஜிபி சைலேந்திரபாபு!

வேலூர் மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 12 கோடி நிதி ஒதுக்கீட்டின்கீழ் தற்போது வரை நகர் முழுவதும் 937 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது எஸ்.பி. அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக ரூ.56 லட்சம் மதிப்பில் தமிழ்நாட்டில் முதல்முறையாக அதி நவீன தொழில் நுட்பத்துடனும் செயற்கைக்கோள் இணைப்புடனும் கூடிய சிசிடிவி மொபைல் கட்டுப்பாட்டு வாகனத்தை காவல்துறை வாங்கியுள்ளது. இந்த வாகனத்தில் ஜாமர் கருவி, ஆறு அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆறு திரைகள் ஆகியவை உள்ளன.

இதில் உள்ள இரண்டு கேமராக்கள் மூலம் இரண்டு கிலோ மீட்டர் வரை தெளிவாக கண்காணிக்க முடியும். இது தற்போது மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, ஆணையர் அசோக்குமார் ஆகியோர் வாகனத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினர்.

இதனை பெற்றுக்கொண்ட டிஜிபி பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, “தற்போது தொடங்கியுள்ள மொபைல் சிசிடிவி கேமரா வாகனம் 56 லட்சம் ரூபாய் மதிப்பிலானது. இதனை காவல் துறைக்கு வழங்கிய மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபோன்று தமிழ்நாட்டில் பல தொழில்நுட்ப வாகனங்கள் இருந்தாலும், அவற்றில் இது முக்கியமான தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் வாகனம் ஆகும். இந்த வாகனம் வேலூர் மாவட்டத்திற்கு மட்டுமின்றி மற்ற மாவட்டங்களின் பயன்பாட்டுக்கும் அனுப்பப்படும். மேலும் வரும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று டிசம்பர் 6ஆம் தேதி இவ்வாகனம் பயன்படுத்தப்படும்.

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர் சந்திப்பு

இது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மட்டுமல்லாமல் சென்னையிலும் கண்காணிக்கப்படும். மற்ற மாநிலத்தைக் காட்டிலும் பல நிலைகளில் தமிழ்நாடு காவல் துறை முன்னோடியாக உள்ளது. சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைமில் 48,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத்தடுக்கவும், ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பது தொடர்பாகவும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களில் பழைய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடியும்” என்றார்.

இதையும் படிங்க:விசேஷத்துக்கு லீவு கேட்டா அசிங்கமா பேசுறாங்க - டிராஃபிக் போலீஸின் குமுறல் ஆடியோ!

ABOUT THE AUTHOR

...view details