தமிழ்நாடு

tamil nadu

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

By

Published : Jul 18, 2023, 11:49 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியினை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திராவிற்கு கடத்தவிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆந்திராவிற்கு கடத்தவிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வெளிமாநிலத்திற்கு கடத்தவிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர்:காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் அரிசி, பல்வேறு இடங்களில் இருந்து வெளியே மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக அடிக்கடி வரும் புகார்களைத் தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், எடுத்துச் செல்லப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடைத்தரகர்கள் மூலம் ரேஷன் அரிசியை அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அவ்வப்போது கடத்தப்படுவதாக வரும் புகார்களைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் சித்தூர் செல்லும் சாலையில் சாலை ஓரமாக கேட்பாரற்று 13 மூட்டைகள் கிடந்தன.

இந்த அரிசி மூட்டைகள் சில மணி நேரத்திற்குள் வாகனங்களில் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த 13 மூட்டைகளில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் திருவலம் நுகர் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இது போன்ற ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றும், அரிசி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும், ரேஷன் அரிசி கடத்துபவர்கள் குறித்து பொதுமக்களும் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுன் மாதம் வரை சென்னை மண்டலத்தில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களை கடத்தியதாக மொத்தம் 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக 525 நபர்களை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி சுமார் 444 டன் பறிமுதல் செய்யப்பட்டு, பொது விநியோக திட்ட மண்ணெண்ணெய் சுமார் 75 லிட்டர், கலப்பட ஆயில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரத்து 700 லிட்டர் மற்றும் சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதாக 445 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:அரசு நிலத்தை அரசிடமே விற்று மோசடி.. ரூ.30லட்சம் மோசடியில் 3 பேரை தேடும் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details