தமிழ்நாடு

tamil nadu

பொதுமக்களை கஞ்சா வாங்க மிரட்டிய இளைஞர்கள் கைது.. திருச்சியில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:24 PM IST

Youths arrested for selling ganja in Trichy: திருச்சியில் பொதுமக்களை மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youths arrested for selling ganja in trichy
திருச்சியில் பொதுமக்களை மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

திருச்சி: திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், மருதாண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண்ணிற்கு இரகசிய தகவல் கிடத்துள்ளது.

இதனை அடுத்து, காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், மேற்கண்ட இடங்களில் சோமரசம்பேட்டை காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது, 5 இளைஞர்கள் கையில் அபாயகரமான ஆயுதங்களை வைத்துக்கொண்டு, அவர்களைக் கடந்து செல்பவர்களிடம் "நாங்க இந்த ஏரியாவில் பெரிய ரவடிங்க, எங்ககிட்ட கஞ்சா வாங்கிட்டு போங்க, இல்லையென்றால் தலை துண்டாகிடும்" என்று மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்ப முயன்றதாகவும், இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் அவர்களை மடக்கிப்பிடித்து, கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து, மேற்படி 5 நபர்களின் மீதும், சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 5 பேரும், திருவரம்பூரைச் சேர்ந்த ராகுல் (20), ஆளவந்தான் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பரமகுரு(23), மனோஜ் (23), மல்லியம்பத்து பகுதியைச் சேர்ந்த மதன்குமார் (20), உறையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (21) மற்றும் அவர்களோடு இருந்த மற்றொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.

இதுமட்டும் அல்லாது, இவர்கள் கஞ்சா மற்றும் அபாயகரமான ஆயுதங்களுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் நேரலையாக வீடியோ பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராகுல் என்பவர் மீது கொலை வழக்கு உள்பட 2 வழக்குகளும், பரமகுரு என்பவர் மீது 4 வழக்குகளும், மதன்குமார் என்பவர் மீது 7 வழக்குகளும் மற்றும் சரவணன் என்பவர் மீது ஒரு வழக்கும் என திருச்சி மாவட்டம் மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தீர்ப்பை வாசிக்கும்போது நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடிய கைதி.. 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details