தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

By

Published : Jul 25, 2023, 10:19 PM IST

திருச்சி மாவட்டத்தில் சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற முயன்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருச்சியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!
திருச்சியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

திருச்சி:மருங்காபுரி அருகே சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க ரூ.5000 லஞ்சம் பெற முயன்ற கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் இன்று (25.7.23) கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மருங்காபுரி வட்டம், கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர், ராகவன். இவரது மகன் பார்த்திபன். இவர் ஒரு பி.இ. பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனத்தினை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது வாகனத்தினை விராலிமலையைச் சேர்ந்த இவரது நண்பர் ரங்கசாமி என்பவரிடம், கடந்த 2001ஆம் ஆண்டு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் ரங்கசாமி, பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தைப் பார்த்திபனுக்கு தெரியாமல் விற்றுவிட்டார். இதனை அறிந்த பார்த்திபன் கடந்த 19.3.2022 அன்று ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் புத்தாநத்தம் காவல்துறையினர் பார்த்திபனின் ஜேசிபி வாகனத்தை கண்டுபிடித்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மணப்பாறை நீதிமன்றத்தில் இருந்து தனது ஜேசிபி இயந்திரத்தை திரும்ப பெற இயலாத பார்த்திபன் உயர் நீதிமன்றத்தினை நாடி வழக்குத் தொடுத்துள்ளார். அதன் பேரில் உயர் நீதிமன்றம் பார்த்திபனிடம் ரூ.5 இலட்சத்திற்கு சொத்து மதிப்புச் சான்றிதழை மணப்பாறை நீதிமன்றத்தில் வழங்கிவிட்டு, இயந்திரத்தை பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

எனவே, பார்த்திபன் சொத்து மதிப்புச் சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜூலை 6ஆம் தேதி விண்ணப்பம் செய்துள்ளார். அந்த மனுவானது கண்ணூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கிடைக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த பார்த்திபன் நேற்று (24.07.2023) காலை 10 மணிக்கு கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை சந்தித்து சொத்து மதிப்புச் சான்றிதழ் பெற பரிந்துரை செய்ய கோரியுள்ளார். அதற்கு கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் 6,000 ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் சொத்து சான்றிதழ் கிடைப்பதற்கு பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார்.

பார்த்திபன் கேட்டுக் கொண்டதன்பேரில் ஆயிரம் ரூபாய் குறைத்துக்கொண்டு ரூ. 5,000 கொடுத்தால் மட்டுமே சொத்து மதிப்புச் சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் அமீர்கான் கட்டாயமாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் போலீசாருடன் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பெயரில் கண்ணூர் ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று (25.7.23) காலை சுமார் 11 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறையினருடன் பார்த்திபன் கண்ணூர் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்று விஏஓ அமீர்கானிடம் ரூ.5000 லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஏஓ அமீர்கானை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்: நேரு எம்.எல்.ஏ, சமூக அமைப்புகள் - புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details